Published : 22 Apr 2018 08:07 AM
Last Updated : 22 Apr 2018 08:07 AM
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் வரும் மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் அதிமுக 3 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதா வது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பெங்களூருவில் உள்ள காந்தி நகரில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் போட்டியிடுவார். அதேபோல், கோலார் தங்கவயல் தொகுதியில் அன்பு, ஹனூர் தொகுதியில் விஷ்னுகுமார் ஆகியோர் போட்டியிடுவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கர்நாடக மாநில முன்னாள் அதிமுக செயலாளர் கிருஷ்ண ராஜு, அக்கட்சியில் இருந்து விலகி ‘கர்நாடக அண்ணா திமுக’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார். “ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, தொண்டர்களை வேதனை அடையச் செய்துள்ளது. எனவேதான், புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறேன். இத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை” என கிருஷ்ணராஜு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT