Published : 05 Apr 2024 08:45 AM
Last Updated : 05 Apr 2024 08:45 AM

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட கேரளாவை சேர்ந்த இருவர் நாடு திரும்பினர்

கோப்புப்படம்

திருவனந்தபுரம்: ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. இப்போரில் ரஷ்யா சார்பில் ஈடுபட இந்தியர்கள் கட்டாயபடுத்தப் படுவதாகவும். மறுப்பவர்கள் மீது பொய் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டுவதாக அங்கு சென்ற இந்தியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்தியர்களை மீட்க வெளியுறவு அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரின்ஸ், டேவிட் முத்தப்பன் ஆகிய இருவர் கடந்த இரு நாட்களில் வீடு திரும்பியுள்ளனர். தனியார் முகவர்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் தங்களுக்கு நேர்ந்த துயரத்தை விளக்கினர்.

முத்தப்பன், டெல்லியில் மத்திய அரசு அமைப்புகளிடம் வாக்குமூலம் அளித்த பிறகு புதன்கிழமை இரவு திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார்.

அவர் கூறும்போது, “அடிப்படைப் பயிற்சிக்கு பிறகு நாங்கள் நேரடியாக போர் முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். உக்ரைன் ராணுவத்துக்கு எதிராக போரிட கட்டாயப்படுத்தப்பட்டோம். நான் உயிருடன் வீடு திரும்புவேன் என்று சிறிதும் நினைக்கவில்லை” என்றார்.

போரில் காயம் அடைந்து ரஷ்ய மருத்துவமனையில் 30 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்ற பிரின்ஸ் கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

பிரின்ஸ் கூறும்போது, “வினீத்,டினு என்கிற எனது 2 நண்பர்கள் இன்னும் யுத்தப் பகுதியில் உள்ளனர். போன் சிக்னல் மூலம் எங்கள்இடத்தின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் எங்களால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை” என்றார்.

முன்னதாக வெளியுறவுத் துறை இணை அமச்சர் வி.முரளீதரன் கூறும்போது, “ரஷ்யாவில் யுத்தப் பகுதியில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவில் அதிகசம்பளத்தில் வேலை இருப்பதாக கூறி இவர்களை அங்கு அழைத்துச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x