Published : 04 Apr 2024 05:46 PM
Last Updated : 04 Apr 2024 05:46 PM

“விஷப் பாம்பைக் கூட நம்பலாம்... பாஜகவை நம்ப முடியாது!” - மம்தா பானர்ஜி தாக்கு

மம்தா பானர்ஜி | கோப்புப்படம்

கொல்கத்தா: பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, "விஷப் பாம்பை கூட நம்பலாம். ஆனால், பாஜகவை நம்ப முடியாது" என்று கடுமையாக சாடியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தின் கூச் பெஹரில் வியாழக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டு பேசியது: "பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மீண்டும் பெயரினை பதிவு செய்யுமாறு பாஜக கேட்கிறது. ஏன் இப்போது பெயரைப் பதிவு செய்யவேண்டும்? அவர்கள் அதிகமான பதிவுகளை விரும்புகிறார்கள். அப்போதுதான் அதனை நிறுத்த முடியும். நீங்கள் ஒரு விஷப் பாம்பைக் கூட நம்பலாம். அதனைச் செல்லப் பிராணியாக வளர்க்கலாம். ஆனால், பாஜகவை ஒருபோதும் நம்ப முடியாது. பாஜக நாட்டையே அழித்து வருகிறது.

மத்திய புலனாய்வு அமைப்புகள், என்ஐஏ, வருமான வரித் துறை, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்றவை பாஜகவின் கட்டளைப்படி செயல்பட்டு வருகின்றன. மத்திய அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், ஒரு சமமான களம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம். பாஜக ‘ஒரே நாடு ஒரே கட்சி’ என்ற கொள்கையை பாஜக பின்பற்றுகிறது" என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பாஜகவை கடுமையாக தாக்கிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூச் பெஹரின் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் தேபாஷிஸ் தார் பாஜகவின் பிர்ஹும் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை கடுமையாக விமர்சித்தார். “தேபாஷிஸ் தார் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது 5 பேர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர்” என்று அவர் சாடினார்.

மம்தா vs மோடி@ கூச் பெஹர்: மேற்கு வங்கத்தின் கூச் பெஹர் மாவட்டத்தின் மக்களவைத் தேர்தல் களம் மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் மோடி என அடுத்தடுத்து இருவரின் பிரச்சாரத்தை கண்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் பிரச்சாரத்துக்குப் பின்னர் அங்கு பேசிய பிரதமர் மோடி, “முதலில் நான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், கடந்த 2019 தேர்தலின்போது இதே இடத்தில் ஒரு பேரணியில் பங்கேற்க வந்தேன்.

அவர் (மம்தா) பேரணியில் மக்கள் குறைவான அளவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மைதானத்தின் நடுவில் மேடை ஒன்றை போட்டார். அப்போது நான், ‘சகோதரி... நீங்கள் தவறு செய்துள்ளீர்கள். இதற்காக மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள்’ என்று சொன்னேன். நீங்கள் பதில் சொல்லி இருக்கிறீர்கள். இந்த முறை அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.

வலுவான மற்றும் நிலையான அரசு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் தேர்தல் இது. ஊழல் மற்றும் தீவிரவாதமற்ற நாட்டை உருவாக்க மோடி கடுமையான முடிவுகளை எடுத்துள்ளேன்" என்றார் பிரதமர் மோடி.

2019 தேர்தலுக்கு பின்னர் கூச் பெஹரில் அதிகமான தேர்தல் ஆதாயங்களைப் பெற்றதால், இந்தப் பகுதியில் பாஜக வலிமை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x