Published : 04 Apr 2024 03:49 PM
Last Updated : 04 Apr 2024 03:49 PM

“10 ஆண்டுகளில் செய்தது வெறும் ட்ரெய்லர்தான்” - பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம்

ஜமுய்: “கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செய்த செயல்கள் வெறும் ட்ரெய்லர்தான்; அதிக விஷயங்கள் இனிதான் நடக்க இருக்கின்றன” என பிரதமர் மோடி பேசினார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, பிஹாரில் முதன்முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள ஜமுய் நகருக்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்று அவருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பாஜகவுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஆதரவாக இங்கு எழுப்பப்படும் கோஷம் இங்குமட்டுமல்ல; நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. நமது அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த செயல்கள் அனைத்தும் ட்ரெய்லர்தான். அதிக விஷயங்கள் இனிதான் நடக்க இருக்கின்றன. நாம் அனைவரும் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம்.

நாட்டின் ரயில்வே அமைச்சராக இருந்த ஒருவர் (லாலு பிரசாத் யாதவை குறிப்பிடுகிறார்) அரசு பணி வழங்க நிலத்தை லஞ்சமாக பெற்றிருக்கிறார். அத்தகையவர்கள் ஒருபோதும் ஏழைகளுக்காக பாடுபட மாட்டார்கள்.

காங்கிரஸும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் உலகின் முன்பாக நாட்டின் கவுரவத்தை பாழ்படுத்தினார்கள். வளர்ச்சி அடைந்த பாரதம்; வளமான பிஹார் எனும் ஒற்றை நோக்கோடு பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உலக நாடுகள் இந்தியாவை பலவீனமான, ஏழை நாடாகப் பார்த்தன. தற்போது நாம் யார் என்பதை உலகிற்கு காட்டி உள்ளோம். இப்போது ஒட்டுமொத்த உலகமும் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக நாம் உயர்ந்திருக்கிறோம்.

காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை சொல்லி வந்தார்கள். ஆனால், தற்போது அவர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு என்னை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின்போது, உணவுக்காக போராடும் சிறிய நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கூட இந்தியா மீது தாக்குதல் நடத்த விரும்பினார்கள்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிஹார் மற்றும் அதன் பெருமையை அவமதித்த கட்சிகள் காங்கிரசும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும். அவர்கள் மறைந்த தலைவர் கர்ப்பூரி தாக்கூரையும் அவமதித்தார்கள். எனது தலைமையிலான அரசு கர்ப்பூரி தாக்கூருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை வழங்கியது. அதையும்கூட அவர்கள் விமர்சித்தார்கள்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்க எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் முயன்றார்கள் காங்கிரஸும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும். இன்றும்கூட அவர்கள் ராமர் கோயிலையும் ராம பக்தர்களையும் விடாமல் அவமரியாதை செய்து வருகிறார்கள். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்மு நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படுவதை எதிர்த்தார்கள்.

வரக்கூடிய மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அதற்கு, பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x