Published : 26 Mar 2024 07:29 AM
Last Updated : 26 Mar 2024 07:29 AM

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களும் இந்தியாவுடன் இணைய விரும்புகின்றனர்: ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கருத்து

மோகன் யாதவ்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் பர்வானியில் நேற்று நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது:

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதலை தூண்டிவிடுவதை காங்கிரஸ் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இப்படித்தான் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டால் அங்கு ரத்த ஆறு ஓடும் என்று அந்த கட்சி அச்சுறுத்தியது.

ஆனால், அவர்களுடைய பொய்களையெல்லாம் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அம்பலப்படுத்திவிட்டது. அதேபோன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டியெழுப்பினால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் மூண்டு நாடு துண்டு துண்டாகும் என்று கட்டுக்கதைகளை காங்கிரஸ் பரப்பியது. ஆனால், அப்படியான எந்த மோதலும் ஏற்படவில்லை. சட்டப்பிரிவு 370 ஜீலம் நதியில் அடித்துச் செல்லப்பட்டு பாகிஸ்தான் கரை கடந்து சென்றுவிட்டது.

சட்டப்பிரிவு 370 ரத்துக்குப் பிறகு காஷ்மீரில் அமைதி நிலவுவதால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள்கூட தாங்களும் இந்தியாவுடன் இணைய விரும்புகின்றனர். நானாக இப்படி சொல்லவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள்சொல்வதைத்தான் சொல்கிறேன். விடுதலைக்குப் பிறகு இந்தியா பிளவுபட்டது துரதிருஷ்டவசமானது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளத் தூண்டியது காங்கிரஸ்தான். இன்று இந்தியா தனதுசொந்த மொழியில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க விரும்புகிறது.

இதற்கிடையில், ஊழலை ஒழிப்பதாகப் பேசிவந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x