Published : 20 Mar 2024 09:04 AM
Last Updated : 20 Mar 2024 09:04 AM

“மன்னிக்கவும்; என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுகிறேன்” - மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்திப் பேசிய மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே அதற்காக மன்னிப்பு கோரியதோடு தனது கருத்துகளை திரும்பப்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இணையமைச்சர் ஷோபா தனது கருத்துகளை திரும்பப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு, எனது வார்த்தைகள் ஒளியை பாய்ச்ச வேண்டும் என்று நினைத்தேனே தவிர இத்தகைய மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நினைக்கவில்லை. எனது வார்த்தைகள் சிலருக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக நான் வருந்துகிறேன். எனது வார்த்தைகள் கிருஷ்ணகிரி வனங்களில் பயிற்சியெடுத்தவர்களைப் பற்றியது. அவர்களைத் தான் நான் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புடன் தொடர்புபடுத்தியிருந்தேன். தமிழகத்தில் எனது வார்த்தைகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் எனது மனதின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கோருகிறேன். மேலும் நான் எனது கருத்தைத் திரும்பப்பெறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது” என்று பேசியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: அவரது கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுங் கண்டனம் தெரிவித்திருந்தார். “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தியுள்ள மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் பொறுப்பற்ற பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசுவதற்கு அவர் ஒன்று, என்ஐஏ அதிகாரியாக இருக்கவேண்டும். அல்லது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். கண்டிப்பாக இப்படி பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. தமிழர்களோடு கன்னடர்களும் பாஜகவின் இந்த பிளவுவாதப் பேச்சை நிராகரிப்பார்கள்.

நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்ததற்காக ஷோபா மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன். பிரதமரில் இருந்து தொண்டர்கள் வரை பாஜகவில் இருக்கும் அனைவரும் இத்தகைய அசிங்கமான, பிரிவினை அரசியலை உடனே நிறுத்த வேண்டும்.தேர்தல் ஆணையம் ஷோபாவின் வெறுப்புப் பேச்சைக் கவனித்து அவர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x