ராமேஸ்வரம் கஃபே சம்பவம்: மத்திய அமைச்சர் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ராமேஸ்வரம் கஃபே சம்பவம்: மத்திய அமைச்சர் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

Published on

சென்னை: "பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தியுள்ள மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் பொறுப்பற்ற பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்களோடு கன்னடர்களும் பாஜகவின் இந்த பிளவுவாதப் பேச்சை நிராகரிப்பார்கள். தேர்தல் ஆணையம் ஷோபாவின் வெறுப்புப் பேச்சைக் கவனித்து அவர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,“பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தியுள்ள மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் பொறுப்பற்ற பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசுவதற்கு அவர் ஒன்று, என்ஐஏ அதிகாரியாக இருக்கவேண்டும். அல்லது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். கண்டிப்பாக இப்படி பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. தமிழர்களோடு கன்னடர்களும் பாஜகவின் இந்த பிளவுவாதப் பேச்சை நிராகரிப்பார்கள்.

நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்ததற்காக ஷோபா மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன். பிரதமரில் இருந்து தொண்டர்கள் வரை பாஜகவில் இருக்கும் அனைவரும் இத்தகைய அசிங்கமான, பிரிவினை அரசியலை உடனே நிறுத்த வேண்டும்.தேர்தல் ஆணையம் ஷோபாவின் வெறுப்புப் பேச்சைக் கவனித்து அவர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது என்று பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in