Published : 17 Feb 2018 09:09 PM
Last Updated : 17 Feb 2018 09:09 PM
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி தொடர்பாக நாடு முழுவதும் இன்று 21 இடங்களில் திடீர் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்த வகையில் ரூ.11,400 கோடி மோசடி செய்ததாக வைர வியாபாரியும், தொழிலதிபருமான நிரவ் மோடி மீது சிபிஐ அமைப்பு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த மோசடி விவகாரத்தில் இதுவரை 15 வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 3 பேரை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. நாட்டையே இந்த மோசடி விவகாரம் உலுக்கியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் 21 இடங்களில் அமலாக்கப் பிரிவினர் இன்று அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் ரூ.25 கோடிக்கும் அதிகமான சொத்துகளை முடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமலாக்கப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அனில் ராவல் கூறியதாவது:
நிரவ் மோடி மோசடி விவகாரம் தொடர்பாக இன்று நாடு முழுவதும் 21 இடங்களில்அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான தங்கம், வெள்ளி, விலை உயர்ந்த கற்கள், நகைகள் உள்ளிட்ட ரூ.25 கோடிக்கும் அதிகமான பொருட்கள் முடக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ.5 ஆயிரத்து 574 கோடிக்கு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில், ரூ.549 கோடி மதிப்பிலான நகைகள், வைர நகைகள் முடக்கப்பட்டன.
நிரவ் மோடிக்கு சொந்தமான மும்பையில் உள்ள வைர நகைக் கடைகள், சோலார் எக்ஸ்போர்ட், ஸ்டெல்லர் டைமன்ட்ஸ் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிபிஐ தரப்பில் கீதாஞ்சலி குழுமத்தின் 10 இயக்குநர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவரக்ள் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அனில் ராவல் தெரிவித்தார்.
.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT