Published : 19 Feb 2018 12:32 PM
Last Updated : 19 Feb 2018 12:32 PM
பெங்களூரு, மைசூரூ நகரங்களில் வசிக்கும் கன்னட மக்களுக்கு சரியாக கன்னடம் பேசத் தெரியாது என மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே கடந்த ஆண்டு டிசம்பரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ‘‘மதச்சார்பின்மைவாதிகள், முற்போக்காளர்கள் என கூறிகொள்பவர்கள், உண்மையில் தங்கள் பெற்றோர் மற்றும் தங்கள் ரத்தத்தின் அடையாளம் இல்லாதவர்கள். இதுபோன்ற அடையாளம் மூலம்தான் ஒருவர் சுயமரியாதையைப் பெற முடியும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை என்ற வாசகத்தை மாற்ற வேண்டும். இதற்கான முயற்சியில் பாஜக அரசு ஈடுபடும்’’ எனக் கூறினார்.
இந்த விவகாரத்தால் நாடாளுமன்றத்தல் பெரும் அமளி ஏற்பட்டது. பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் அமைச்சர் ஹெக்டேயின் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஹெக்டே, கர்நாடகாவில் வசிக்கும் பலருக்கு சரியான முறையில் கன்னடம் பேசத் தெரியவில்லை. கன்னடத்தை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் வடக்கு கர்நாடகா மற்றும் ஷிமோகா பகுதி மக்கள் மட்டுமே கன்னடத்தை உரிய முறையில் பேசுகின்றனர். பெங்களூரு, மைசூரு பகுதியில் வசிக்கும் கன்னட மக்களுக்கு சரியான முறையில் கன்னடம் பேசத் தெரிவில்லை’’ எனக் கூறினார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸைச் சேர்ந்த முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக தலைவர்களும் கண்டித்துள்ளனர். பெங்களூரு மற்றும் மைசூரு பகுதி மக்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் ஹெக்டே பேசியுள்ளதாக, கன்னட எழுத்தாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT