Last Updated : 21 Feb, 2018 07:30 AM

 

Published : 21 Feb 2018 07:30 AM
Last Updated : 21 Feb 2018 07:30 AM

கர்நாடகாவில் கல்லூரி மாணவரை தனது மகன் தாக்கியதற்காக சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய எம்எல்ஏ

பெங்களூருவில் கல்லூரி மாணவரை தனது மகன் தாக்கியதற்காக, கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஹாரீஷ் நேற்று மன்னிப்பு கோரினார்.

பெங்களூருவில் உள்ள சாந்திநகர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஹாரீஷின் மகன் முகமது நளபாட். இவர் கடந்த சனிக்கிழமை இரவு தனியார் விடுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர் வித்யுத் என்பவரை கடுமையாக தாக்கினர்.

இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கப்பன் பூங்கா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வித்யுத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனிடையே முகமது நளபாட் உள்ளிட்ட 7 பேரை கொலை முயற்சி வழக்கில் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று சட்டப்பேரவையில் பேசும்போது, “காங்கிரஸ் எம்எல்ஏ ஹாரீஷின் மகன் அப்பாவி கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தை பார்க்கும்போது ரவுடிகள் ஆட்சி செய்கிறார்களா? என சந்தேகம் ஏற்படுகிறது” என்றார்.

இதையடுத்து ஹாரீஷ் பேசும்போது, “எனது மகன் செய்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக பாதிக்கப்பட்ட மாணவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளேன். தவறு செய்த என் மகன் மீது போலீஸார் சட்டப்படி வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். ஆனால் எதிர்க்கட்சியினர் இந்த சம்பவத்தை அரசியலாக்கி வருகின்றனர்” என்றார்.

இந்த விவகாரத்தை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் கையில் எடுத்துள்ளதால் காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஷ்வர் அதிருப்தி அடைந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்துள்ள அவர், பெங்களூரு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து முகமது நளபாட்டை 6 ஆண்டுகளுக்கு பதவி நீக்கம் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x