Last Updated : 05 Mar, 2024 06:23 AM

 

Published : 05 Mar 2024 06:23 AM
Last Updated : 05 Mar 2024 06:23 AM

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்

கோப்புப்படம்

பெங்களூரு/புதுடெல்லி: பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ)விசாரணைக்கு மாற்றப்பட்டுள் ளது. உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பெங்களூருவில் ஒயிட் ஃபீல்ட் அருகில் செயல்பட்டுவந்த ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற பிரப‌ல உணவகத்தில் கடந்த 1-ம் தேதி சக்தி குறைந்த குண்டுவெடித்தது. இதில் காயமடைந்த 10 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பெங்களூரு போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 8 தனிப்படைகள் அமைத்துள்ளனர். பெங்களூரு, தார்வாட், ஹுப்ளி ஆகிய இடங்களில் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால் சிசிடிவியில் காணப்படும் நபரை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

தடயங்கள் சேகரிப்பு: இந்நிலையில், தடயவியல் துறை மற்றும் வெடிகுண்டு தடுப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். இதேபோல என்ஐஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளும் 3 நாட்களாக அங்கு விசாரணை நடத்தினர். அங்கே சிதறிக் கிடந்த வெடிபொருட்கள், ஆணிகள், ஒயர் ஆகியவற்றை கைப்பற்றி, தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ள‌னர்.

இதற்கிடையில், இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் சித்தராமையா, “தேவைப்பட்டால் இவ்வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்படும்” என்றார்.

இந்நிலையில் நேற்று என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெங்களூரு உணவகத்தில் மார்ச் 1-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி அந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்துவர்.

சிசிடிவி காட்சிகள், குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து விசாரணை தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் 9 நிமிடங்கள் இருந்த குற்றவாளி: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவரின் அடையாளங்களை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் வரைந்துள்ளனர்.

பெங்களூரு மாநகர பேருந்தில் வந்திறங்கிய அந்த நபர் வெள்ளை டி ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட், கறுப்பு ஷூ, கறுப்பு கண்ணாடி, முகக்கவசம், வெள்ளை தொப்பி அணிந்துள்ளார். சம்பவத்தன்று காலை 11.34 மணிக்கு உணவகத்துக்குள் நுழையும் அவர், ரவா இட்லி வாங்கி வேகமாக சாப்பிடுகிறார். தான் கொண்டுவந்த பையை உணவு சாப்பிடும் மேஜைக்கு அடியில் வைத்துவிட்டு, அங்கிருந்து 11.43 மணிக்கு வேகமாக‌ வெளியேறுகிறார்.

அவர் சென்ற 1 மணி நேரத்துக்கு பிறகு 12.55 மணியளவில் குண்டுவெடித்து சிதறுகிறது. டிபன் பாக்ஸ் ஐஇடி குண்டு, டிஜிட்டல் டைமர் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x