Published : 05 Mar 2024 07:01 AM
Last Updated : 05 Mar 2024 07:01 AM

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: டெல்லி அரசு அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: டெல்லி அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் நிதியமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் உரையில் கூறும்போது, “டெல்லியில் முக்கிய மந்திரி மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்படி டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக வரும் நிதியாண்டில் பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்படுகிறது” என்றார்.

இந்தத் திட்டத்தில் பலனடைய பெண்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் டெல்லி வாக்காளர்களாகவும் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவராக இருக்க கூடாது. வேறு ஏதேனும் ஒரு திட்டத்தில் ஓய்வூதியம் பெற்றாலோ அல்லது அரசு ஊழியர்களாக இருந்தாலோ இத்திட்டத்தின் பலன்களை பெற முடியாது.

அமைச்சர் அதிஷி தனது பட்ஜெட் உரையில், ‘ராம ராஜ்ஜியம்’ என்ற கனவை நனவாக்க அரசு முயன்று வருவதாக குறிப்பிட்டார். மொத்தம் ரூ.76,000 கோடி செலவில் டெல்லி பட்ஜெட் நேற்று தாக்கல்செய்யப்பட்டது. இது டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்த 10-வது பட்ஜெட் ஆகும்.

கட்சி அலுவலகம் காலி: டெல்லியில் மண்டி ஹவுஸ், பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் ரோஸ் அவென்யூநீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்ற வளாகம் அருகில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் செயல்படுகிறது. ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் செயல்படுவது தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம்,ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து ஆம் ஆத்மி அலுவலகத்தை காலிசெய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதிசந்திரசூட், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு வழக்கை விசாரித்தது. ஆம் ஆத்மி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட்,‘‘நீதிமன்ற நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது. டெல்லி ரோஸ்அவென்யூ வளாகத்தில் செயல்படும் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை ஜூன் 15-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தல் நெருங்குவதை கருத்தில்கொண்டு கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளோம். புதிய நிலம்ஒதுக்கக் கோரி நிலம் மற்றும்வளர்ச்சித் துறை அலுவலகத்தை ஆம் ஆத்மி அணுகலாம். ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்ட பிறகு ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தை விரிவுபடுத்தலாம்’’ என்று தீர்ப் பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x