Published : 17 Feb 2018 08:41 PM
Last Updated : 17 Feb 2018 08:41 PM
பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் நாட்டின் நிதி அமைப்பு அழிந்துவிட்டது. மக்களின் சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்து வங்கிக்கு கொடுத்தார், வங்கிகளிடம் இருந்து மோடியின் நண்பர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டம் முடிந்தபின், நிருபர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் நாட்டின் நிதிமுறையே சீரழிந்துவிட்டது. கடந்த 2013-ம் ஆண்டு நிரவ் மோடியின் கடை திறப்பு விழாவுக்கு நான் சென்றதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. இது நிரவ் மோடி விவகாரத்தில் இருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சியாகும்.
இப்போது நாடு அடைந்திருக்கும் சீரழிவான நிலைக்கு காரணமே, பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் காரணமாகும்.
மக்களின் சட்டைப்பையில் இருந்து இருக்கும் பணத்தை எல்லாம் வங்கிக்கு கொடுத்தார். ஆனால், வங்கியில் இருக்கும் பணத்தை எல்லாம் மோடியின் நண்பர்களும், அதிகாரிகளுடன், அரசியல்வாதிகளுடன் கைகோத்து செயல்படும் முதலாளிகள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
நிரவ் மோடியின் வங்கி மோசடி என்பது அதிகாரிகளின், ஆளும் அரசியல் தலைவர்களின் ஆதரவு இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல் நடந்து இருக்காது.
மக்களுக்கு இந்த விவகாரம் குறித்து உண்மை நிலையைத் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதும் சாத்தியமில்லை. பிரதமர் மோடி தாமாக முன்வந்து மக்களிடம் தன்னிலை விளக்கம் அளித்து, கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
ஆனால், இந்த ஊழல்கள், மோசடிகள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்ததாக பாஜக திசை திருப்புகிறது. நிரவ் மோடி மோசடி வழக்கில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை மக்களுக்கு பிரதமர் மோடி தெரியப்படுத்த வேண்டும். அதில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துவருகிறது என்பதையும் கூற வேண்டும்.
மாணவர்கள் ஒன்றரை மணிநேரம் எப்படி தேர்வு எழுத வேண்டும் என்று பிரதமர் மோடி கற்றுக்கொடுக்கிறார். ஆனால், இந்த ஊழல்களுக்கும், மோசடிகளுக்கும் யார் பொறுப்பு என்பதை கூறுவதில் மோடி தோல்வி அடைந்துவிட்டார்.
ஆனால், நிரவ் மோடி விவகாரத்துக்கு தொடர்பு இல்லாத பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் விளக்கம் அளிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சரான அருண் ஜேட்லி, பிரதமர் மோடி பதில் அளிக்க மறுக்கிறார்கள்.''
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT