Published : 21 Feb 2018 07:17 AM
Last Updated : 21 Feb 2018 07:17 AM
சர்ச்சைக்குரிய குற்றவியல் சட்டங்கள் (திருத்தம்) மசோதாவை ராஜஸ்தான் அரசு வாபஸ் பெற்றுள்ளது.
முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான ராஜஸ்தான் அரசு, கடந்த ஆண்டு செப்டம்பரில் குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்து ஓர் அவசரச் சட்டம் பிறப்பித்தது. பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள் மற்றும் அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுகளை அரசின் அனுமதியின்றி விசாரிக்க முடியாத வகையில் இந்த சட்டம் பாதுகாப்பு அளித்தது. மேலும் அரசு அனுமதி அளிக்கும் வரை குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் யார் என ஊடகங்கள் வெளிப்படுத்தவும் இந்த அவசர சட்டம் தடை செய்தது. மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கவும் வழி செய்யப்பட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய இந்த அவசர சட்டம், மசோதாவாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மறுநாளே இந்த மசோதாவை பேரவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அரசு அனுப்பி வைத்தது.
இந்நிலையில் இந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் நேற்று முன்தினம் அறிவித்தார். இது தொடர்பான அவசரச் சட்டமும் காலாவதி ஆனதாக அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT