Published : 03 Feb 2018 09:11 AM
Last Updated : 03 Feb 2018 09:11 AM
கட்சிகள் தேர்தல் நிதி திரட்ட நன்கொடை பத்திரங்கள் வெளியிடப்படுவதை ஆட்சேபித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல்செய்துள்ள மனு மீது பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நேரத்தின்போது அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளன. இந்த நிதி தொடர்பாக முறையான கணக்கு வைத்துக் கொள்வதில்லை என்ற புகார் தேர்தல் ஆணையத்துக்கு வந்தது. இதையடுத்து தேர்தல் நிதி பெறுவதற்கு தேர்தல் நன்கொடை பத்திரங்களை வங்கி மூலம் வெளியிட கடந்த ஆண்டே பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அதற்கு அப்போது எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன.
தேர்தல் பத்திரங்கள் வெளியிடும் முறையை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் முடிவை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் நிதி பத்திரங்களால் மிகப்பெரிய அரசியல் ஊழல் நடைபெற வழிவகுக்கப்படும். இதை நிறுத்தவேண்டும் என்று மனுவில் அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இதுபோன்று தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும், இந்த வழக்குடன் இணைத்து விசாரிக்கவும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT