Published : 17 Feb 2018 03:20 PM
Last Updated : 17 Feb 2018 03:20 PM
காங்கிரஸின் காரிய கமிட்டிக்கு பதிலாக அதன் தலைவர் ராகுல் காந்தி புதிதாக வழிகாட்டுதல் குழுவை ஸ்டிரீன் கமிட்டி) அமைத்துள்ளார். மொத்தம் 34 பேர் கொண்ட குழுவில் தமிழகத்தில் இருந்து ப.சிதம்பரமும், டாக்டர்.ஏ.செல்லக்குமாரும் இடம் பெற்றுள்ளனர்.
சோனியா காந்தி தலைமையில் இருந்தது வரை காங்கிரஸ் கட்சியின் உயரிய அமைப்பாக காரிய கமிட்டி இருந்தது. கட்சியின் கொள்கை முடிவுகள், வேட்பாளர் தேர்வு, மாநில கட்சித் தலைவர் தேர்வு உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை அது எடுத்துவந்தது. கட்சித் தலைவர் சோனியா தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அதில் இடம் பெற்றிருந்தனர்.
இப்போது புதிய தலைவராகப் பதவி ஏற்ற ராகுல் காந்தி கட்சியில் முதன்முறையாக ஒரு புதிய மாற்றம் செய்துள்ளார். காரிய கமிட்டிக்கு பதிலாக வழிகாட்டுதல் குழு அமைத்து அதன் உறுப்பினர்களை அறிவித்துள்ளார். ராகுல், முன்னாள் தலைவர் சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அதில் இடம் பெற்றுள்ளனர். காரிய கமிட்டியில் இருந்த பலரும் புதிய குழுவில் இடம்பெறவில்லை.
மூத்த தலைவர்களில் முக்கியமானவர்களாக ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல், குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி, அசோக் கெல்லட், ஜனார்தன் துவேதி, திக்விஜய்சிங், ஆஸ்கர் பெர்ணாண்டஸ், ப.சிதம்பரம், கமல்நாத், மோதிலால் வோரா, அனந்த் சர்மா மற்றும் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப்சிங் சுர்ஜேவாலா உட்பட மொத்தம் 34 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் சார்பில் ப.சிதம்பரத்துடன் சேர்த்து டாக்டர்.ஏ.செல்லக்குமார் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அவர்கள் இருவரும் தமிழகத்தின் செல்வாக்குள்ள தலைவராக காங்கிரஸில் செயல்பட உள்ளனர். ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் செல்லக்குமார் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
புதிய வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் கூட உள்ளது. இந்த முதல் கூட்டத்தில் மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT