Published : 19 Jan 2024 12:38 AM
Last Updated : 19 Jan 2024 12:38 AM

சுற்றுலா சென்றபோது துயரம் - 14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வதோதரா படகு விபத்து ஏற்பட்டது எப்படி?

வதோதரா: வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 14 பேர் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், விபத்து தொடர்பாக 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே, விபத்தில் சிக்கிய படகில் 27 மாணவர்கள் பயணம் செய்ததாக வதோதரா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.கோர் தெரிவித்துள்ளார். ஹார்ணி என்ற ஏரியில் படகு கவிழ்ந்துள்ளது. படகில் பயணித்த மாணவர்கள் தேடும் பணி நிகழ்விடத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

நடந்தது என்ன?: வியாழக்கிழமை (ஜன.18) அன்று வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஹார்ணி ஏரிக்கு மாணவர்கள் சுற்றுலா நிமித்தமாக வந்துள்ளனர். இந்தச் சூழலில் 27 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணம் செய்த படகு ஏரியில் மதியம் கவிழ்ந்துள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், 14 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்பு படை மற்றும் தீயணைப்பு படையினர் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியின் அடிப்பகுதியில் சேறுகள் இருப்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்தது எப்படி?: வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷன் நிலைக்குழுவின் தலைவர் ஷீத்தல் மிஸ்திரி கூறுகையில், "படகில் சுமார் 35 பேர் இருந்தனர். ஒருவேளை படகின் அளவை தாண்டி அதிகளவு ஆட்கள் ஏறியிருக்கலாம் என கருதுகிறோம். இதனால் , படகு சமநிலையை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் படகில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேபோல், விபத்து குறித்து வெளிவரும் பேசியுள்ள மற்ற அதிகாரிகளும், "மாணவர்களும் ஆசிரியர்களும் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தார்களா, ஏறக்குறைய 30 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட படகுதானா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அது தெரியவந்த பின்னரே விபத்து எப்படி நடந்தது எனத் தெரியும்" என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, "வதோதரா படகு விபத்து சம்பவத்தில் 14 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த உடனே கலெக்டர், போலீஸ் கமிஷனர், நகராட்சி கமிஷனர் மற்றும் 60க்கும் மேற்பட்ட NDRF மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க முதலமைச்சர் விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடி இரங்கல்: “வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்ததால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வேதனை அடைந்தேன். துக்கமான இந்த நேரத்தில் என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது." என்று தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 அரசு தரப்பில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், "பள்ளி நிர்வாகம் சுற்றுலாவிற்கு அனுமதி பெற்றுள்ளதா என்றும், பள்ளி குழந்தைகள் சவாரி செய்வதற்கு முன் படகில் பாதுகாப்பு கருவிகள் உள்ளதா என சோதிக்கப்பட்டதா என்றும்" கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x