Published : 18 Jan 2024 08:38 PM
Last Updated : 18 Jan 2024 08:38 PM

ஆந்திராவில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்: ஜி.என்.ராவ்

ஆந்திரா: விஜயவாடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 125 அடி உயர டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிலையை வெள்ளிக்கிழமை (ஜன.19) ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைக்கிறார். இந்தச் சிலையின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்வராஜ் மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள இச்சிலை, அங்குள்ள அம்பேத்கர் ஸ்மிரிதி வனத்தில் 81 அடி பீடத்தின் மேல் 125 அடி உயர உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 18.81 ஏக்கர் பரப்பளவில், ரூ. 404.35 கோடி செலவில் இந்தச் சிலையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

இந்த 125 அடி சிலை எஃகு மற்றும் வெண்கலம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 400 மெட்ரிக் டன் துரு பிடிக்காத எஃக்கும், 120 மெட்ரிக் டன் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிலையின் பீடம், பவுத்த கட்டடிக் கலையின் காலச்சக்கர மண்டலம் போல வடிவமைக்கப்பட்டள்ளன. பீட பகுதி மட்டும் 11,140 கன மீட்டர் கான்க்ரீடாலும், 1445 மெட்ரிக் டன் டிஎம்டி கம்பிகளாலும் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் இளஞ்சிவப்பு மணல்கற்கள் பூச்சுக்கொண்டுள்ளது.

இந்த நினைவுச் சின்னத்தின் முன்புறத்தில் ஆறு நீர்நிலைகள் உள்ளன. மையத்தில் ஓர் இசை செயற்கை நீரூற்றும் உள்ளது. இந்தச் சிலைக்கானத் திட்டதில் 2 ஆண்டுகளாக 55 தொழில்நுட்ப மற்றும் உதவியாளர்களுடன் 500 முதல் 600 ஆட்கள் தினமும் வேலை செய்துள்ளனர்.

சிலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எக்பிரீயன்ஸ் சென்டர், 2000 பேர் அமரக்கூடிய வகையில் மாநாட்டு அரங்கம், உணவு அரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டு இடம், நீர் நிலைகளை, இசை நீரூற்று, நடைபாதைகள் ஆகியவை அமைந்துள்ளன. டாக்டர் அம்பேத்கர் சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரியன்ஸ் சென்டரில் அவரின் வாழ்க்கைத் தொடர்புடைய விஷயங்கள் மின்னணு காட்சிகளுடன் காட்சிப்படுத்தப்படும்.

இந்தக் கட்டமைப்பில் அம்பேத்கர் வாழ்க்கையை சித்தரிக்கும் கலைபடைப்புகளுடன் கூடிய 166 தூண்கள் உள்ளன. இந்த திட்டமானது கடந்த 2021 டிச.21-ல் தொடங்கப்பட்டது. முன்னதாக 2023 ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில் திறப்பதாக திட்டமிடப்பட்டது.

இந்த சிலை நிறுவும் பணிகள் ஆந்திரப் பிரதேச அரசின் சமூக நலத் துறையால் மேற்பார்வையிடப்பட்டது. திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனமாக ஆந்திரப் பிரதேசத்தின் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் லிமிட் இருந்தது. திட்டத்துக்கான ஒப்பந்ததாரராக கேபிசி ப்ராஜெக்ட் லிமிட் இருந்தது. இதன் வடிவமைப்பாளராக எம்.எஸ் டிசைன் அசோசியேட்ஸ் நிறுவனம் செயல்பட்டது.

சிலை குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், “மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே மகுடமாக விளங்கும் இந்தச் சிலை சமூக நீதிக்கான மிகச் சிறந்த சிற்பம்” என்று வர்ணித்துள்ளார்.

முன்னதாக, டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது 125 அடி உயர சிலையை தெலங்கானாவில், அம்மாநில முதல்வராக இருந்த கே.சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு திறந்து வைத்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x