Published : 23 Dec 2023 06:49 AM
Last Updated : 23 Dec 2023 06:49 AM

ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் 4 வீரர்கள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இரு ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் தேரா கி கலி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த புதன்கிழமை பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அங்கு நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் மறுநாளும் நீடித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் ஒரு லாரி மற்றும் ஒரு ஜீப்பில் கூடுதல் வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ரஜவுரி எல்லையை ஒட்டிய பூஞ்ச் மாவட்டத்தின் தாத்யார் மோர் என்ற இடத்தில் இந்த வாகனங்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெறுகிறது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஜவுரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் கடந்த 2021 அக்டோபர் முதல் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு 34 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் நேற்று முன்தினம் வரை இது 20 ஆக உள்ளது. அடர்ந்த வனப்பகுதி மற்றும் சவாலான நிலப்பகுதியை கொண்ட இப்பிராந்தியத்தில் ராணுவம் தொடர் தாக்குதல்களை எதிர்கொள்கிறது.

இதனிடையே இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் துணை அமைப்பான, தடை செய்யப்பட்ட பாசிச விரோத மக்கள் படை (பிஏஎப்எப்) பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் விருந்துக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற ராணுவ லாரி மீது தாக்குல் நடத்தப்பட்டது. இதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தற்போதைய தாக்குதல் ஒத்துள்ளது. மேலும் ஏப்ரல் மாத தாக்குதலுக்கு பிஏஎப்எப் பொறுப்பேற்று புகைப்படங்களை வெளியிட்டது.

இதனிடையே ரஜவுரி - பூஞ்ச் பிராந்தியத்தில் சுமார் 30 தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளன.

லடாக் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய ராணுவம் – சீனப் படைகள் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. கடந்த 2020-ல் லடாக்கில் சீனாவின் அத்துமீறிய தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இருந்த ராஷ்ட்ரியரைபிள்ஸ் படையினர் லடாக் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் லடாக் பகுதியில் உள்ள இந்திய வீரர்களை மீண்டும் காஷ்மீரில் பணியமர்த்தும் கட்டாயத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்த சீனா விரும்புகிறது. இதன் காரணமாகவே ரஜவுரி – பூஞ்ச் பிராந்தியத்தில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் புதுப்பிக்க முயன்று வருகிறது. பூஞ்ச், ரஜவுரி மாவட்ட வனப் பகுதி மற்றும் உயர்ந்த மலைப் பகுதியில் 25 முதல் 30 தீவிரவாதிகள் வரை பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x