Published : 27 Jan 2018 06:30 PM
Last Updated : 27 Jan 2018 06:30 PM
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மானியங்களை மக்களுக்கு நேரடியாக அளிக்கும் நேரடி மானியத் திட்டம் மூலம் அரசுக்கு ரூ.65 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.
விவேக் தீப்ராய், கிஷோர் அருண் தேசாய் ஆகியோர் எழுதிய 'ஆன் தி ட்ரெயல் ஆப் தி பிளாக்' என்ற நூல் வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடந்தது.
இந்த நூலை வெளியிட்டு நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் பேசியதாவது-
மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் நேரடி மானியத் திட்டத்துடன் இணைக்கப்படும். அப்போதுதான் ஊழல் அகற்றப்படும். இப்போது, மத்திய அரசின் 300 திட்டங்கள் மட்டுமே நேரடி மானியத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டில் உள்ள 41 கோடி மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். மத்தியஅரசு தனது திட்டங்களுக்கு அளிக்கும் மானியத்தை பயணாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவதன் மூலம், இதுவரை ரூ.65 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பயன்பாட்டில் இல்லாத 1,200 பழைய சட்டங்களை ஒழித்துள்ளது. மேலும் இந்தியாவில் வந்து சர்வதேச நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள் எளிதாக தொழில் செய்யும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டுமென்றால் அனைத்து விஷயங்களும், நெறிமுறைகளும் ஒரு பக்கத்தில் முடியும் வகையில் தொழில்தொடங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது.''
இவ்வாறு அமிதாப் காந்த் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT