Published : 15 Sep 2023 05:38 PM
Last Updated : 15 Sep 2023 05:38 PM

கர்நாடகாவில் சலசலப்பு | ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரும் இந்து அமைப்பாளர்கள்!

ஈக்தா மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு | படம்: கிரண் பகலே

பெங்களூரு: விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளியில் உள்ள சர்ச்சைக்குரிய ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைப்பதற்கு உள்ளூர் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாத்திடம் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் அனுமதி கோரியுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ஈத்கா மைதானத்தில் இந்த ஆண்டு விநாயகர் சிலை நிறுவுவதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால், இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதூர்த்தி கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று வலதுசாரி ஆர்வலர்கள், மாநகராட்சி அலுவலர்களை வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் சிலை வைக்க அனுமதி வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அனுமதி வழங்காவிட்டாலும் மைதானத்தில் விநாயகர் சிலை நிறுவப்படும் என்று பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹூப்பள்ளி - தார்வாட் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான அரவிந்த் பெல்லாட் கூறுகையில், "ஆணையர் எங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. எங்களது நோக்கம் ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமே. அரசு எங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் அஹோராத்திரி (இரவோடு இரவாக) நடத்துவோம். அனுமதி வழங்கும் வரை போராட்டத்தைத் தொடருவோம்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த முறை மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி வழங்காமல் மாநில அரசு விழா நடத்த விடாமல் தடுக்கிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்து, புனித விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று நான் மாநில அரசினை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கர்நாடகா மாநிலம் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம், வக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த மைதானம் அரசுக்கு சொந்தமானது என அப்போதைய கர்நாடக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, சுதந்திர தினத்தின்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் முறையாக அங்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பந்தல் வைக்கப்போவதாக அறிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த‌ எஸ்டிபிஐ கட்சியினர், அதனைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரித்தனர்.

இதனிடையே, ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முந்தைய கர்நாடக அரசு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. இதனை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஏ.எஸ். ஓகா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரங்களுக்கு முன்பு அங்கு நிலவிய சூழலையே தொடர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x