Published : 15 Sep 2023 02:23 PM
Last Updated : 15 Sep 2023 02:23 PM

சர்வதேச ஜனநாயக தினம் | அரசியல் சாசன முகப்புரையை வாசித்து கொண்டாடிய காங்கிரஸ்

அரசியல் சாசன முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி

பெங்களூரு: சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையை வாசித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதியை சர்வதேச ஜனநாயக தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 'அடுத்த தலைமுறைக்கு அதிகாரமளித்தல்' என்பது இந்த ஆண்டுக்கான சர்வதேச ஜனநாயக தினத்தின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை முன்னேற்றுவதில் இளைஞர் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கிலும், முடிவுகளை எடுப்பதில் அவர்களின் குரல்களும் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கிலும் இத்தகைய கருப்பொருள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. சர்வதேச ஜனநாயக தினம் உலகின் பல ஜனநாயக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

கர்நாடக அரசு சார்பில் நடைபெற்ற சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் அரசியல் சாசன முகப்புரையை வாசித்தனர். அரசியல் சாசனத்தின் முகப்புரையில் இந்தியா எனும் பாரத் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. மத்திய அரசு நாட்டின் பெயரை பாரத் எனும் ஒரே பெயர் கொண்டு அழைக்கும்படி, சட்டத்திருத்தம் கொண்டு வர உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அரசியல் சாசன முகப்புரையை வாசித்து சர்வதேச ஜனநாயக தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிரியங்க் கார்கே, "சர்வதேச ஜனநாயக தினத்தை கர்நாடக அரசு மிகப் பெரிய அளவில் கொண்டாடி உள்ளது. இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி இந்திய அரசியல் சாசனத்தின் முப்புரையை வாசித்தனர். அதேநேரத்தில், இந்த தினத்தை மத்திய அரசு கொண்டாடவில்லை. அவர்களுக்கு அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது" என குற்றம் சாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x