Last Updated : 12 Sep, 2023 09:36 PM

 

Published : 12 Sep 2023 09:36 PM
Last Updated : 12 Sep 2023 09:36 PM

கர்நாடகாவில் மகளிர் இலவச பேருந்து பயண‌ திட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கு போதிய ஆதரவில்லை!

பெங்களூரு: கர்நாடகாவில் மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயண சேவை அளிக்கப்பட்டதை கண்டித்து தனியார் வாகன சங்கங்கள் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இதற்கு பொதுமக்களிடம் முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை.

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து முதல்வர் சித்தராமையா, மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயண சேவையை அளிக்கும் சக்தி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்கு மகளிரிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேவேளையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், வாடகை வாகன உரிமையாளர் சங்கம் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த திட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதனை அரசு ஏற்காததால், தனியார் வாகன உரிமையாளர் சங்கம் சார்பில் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் நேற்று அதிகாலை 12 மணி தொடங்கி நள்ளிரவு 12 மணி வரைபெங்களூருவில் 60 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோ, வாடகை கார், தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதேவேளையில் பல்வேறு இடங்களில் ஆட்டோ, வாடகை கார், பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும், கடைகளும் வழக்கம்போல செயல்பட்டன. முழு அடைப்பு போராட்டத்தால் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல மெட்ரோ ரயில் சேவையும் கூடுதலாக செயல்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

இதனிடையே தனியார் வாகன உரிமையாளர் சங்கத்தினர் கெம்பே கவுடா பேருந்து நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்கா வரை பேரணியாக சென்றனர். அப்போது கர்நாடக அரசுக்கு எதிராகவும், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். கர்நாடக அரசின் இலவச பயண திட்டத்துக்கு மகளிர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x