Last Updated : 12 Sep, 2023 08:09 PM

 

Published : 12 Sep 2023 08:09 PM
Last Updated : 12 Sep 2023 08:09 PM

நூ கலவரத்துக்கு காரணமான மோனு கைது: ராஜஸ்தானில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்!

புதுடெல்லி: ஹரியாணாவின் நூ கலவரத்துக்கு காரணமான மோனு மானேஸர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானியர் இருவரை எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியாணாவின் நூவில் இந்துத்துவா அமைப்புகள் கடந்த ஜூலை 31-இல் ஆன்மிக ஊர்வலம் நடத்தினர். இதை இதர சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தியதால் கலவரம் ஏற்பட்டது. இதற்கு, பசு பாதுகாவலரான மோனு மானேஸர், சமூக வலைதளங்களில் இட்ட பதிவு காரணம் எனப் புகார் எழுந்தது. இக்கலவரம், அருகிலுள்ள குருகிராமிற்கும் பரவி அங்குள்ள மசூதிக்கு தீவைக்கப்பட்டது. குருகிராம் மசூதியின் இளம் மவுலானா, 2 ஊர்காவல் படையினர், ஒரு முன்னாள் பஜ்ரங்தளம் நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

இக்கலவரம், நூவை சுற்றியுள்ள பல்வல், குருகிராம், பரீதாபாத் மற்றும் ஆகிய நகரங்களிலும் பரவியது. இதனால், வெளிமாநிலங்களிலிருந்து பிழைக்க வந்த பல நூறு முஸ்லிம் குடும்பங்கள் தங்கள் ஊருக்கு திரும்பி விட்டனர். இப்பகுதியில் அமைதி திரும்ப, மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் ஹரியாணா போலீஸாரின் பலத்த பாதுகாப்பும் போட வேண்டியதாயிற்று. இதில் இருதரப்பிலும் பலர் கைதானாலும், முக்கியக் குற்றவாளியான மோனு மானேஸர் தலைமறைவாகவே இருந்தார்.

எனினும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளை இட்டு தம்மீது எந்த தவறும் இல்லை எனவும் விளக்கம் அளித்து வந்தார். இச்சூழலில், இன்று காலை மோனி மானேஸர், குருகிராமின் செக்டர் 1-இல் ஹரியானா போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டார். இவர் மீது ராஜஸ்தான் காவல் துறையிலும் இரட்டை கொலை வழக்கு பதிவாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 16-இல் ராஜஸ்தான் பரத்பூரை சேர்ந்த நசீர் (27), ஜுனைத்(35) என்ற இருவர் ஹரியாணாவின் பிவாணியில் எரித்துக் கொல்லப்பட்டனர். இவர்கள் பசுக்களை கடத்தியதாகக் கூறி, பசு பாதுகாப்பு படையினரால் இருவரும் கொல்லப்பட்டதாக வழக்கு பதிவாகி நடைபெறுகிறது.

இந்த வழக்கில் பசுப் பாதுகாப்பு குழுவின் தலைவரான மோனு மானேஸர், அவரது சகாக்களான அணில், ஸ்ரீகாந்த், ரிங்கு செய்னி, லோகேஷ் சிங்லா ஆகிய நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் பஜ்ரங்தளம் அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. இவர்களில் ஒரு குற்றவாளி அடுத்த நாள் கைதானார். மேலும் இருவர் கடந்த ஏப்ரல் 14-இல் ராஜஸ்தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். எனினும், முக்கியக் குற்றவாளியான மோனுவை ராஜஸ்தான் போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. இதற்கு ஹரியாணா காவல் துறை தனக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை எனவும் புகார் நிலவியது.

ஏனெனில், மோனு சமூக வலைதளங்களில் தனது கருத்துகளையும், படங்களையும் அவ்வப்போது பதிவேற்றம் செய்துள்ளார். இதுபோன்ற பதிவால், கடந்த மாதம் ஹரியாணாவின் நூவில் நடைபெற்ற மதக்கலவரத்துக்கும் மோனு காரணம் எனப் புகார் எழுந்தது. இந்நிலையில், இன்று கைதான மோனுவை நூ கலவரக் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மோனுவை இரட்டை கொலை வழக்கிலும் கைது செய்து ராஜஸ்தான் போலீஸார் விசாரிக்க உள்ளனர். ஹரியாணாவின் மானேஸர் கிராமத்தை சேர்ந்தவர் இந்த மோனு மானேஸர் என்றழைக்கப்படும் மோஹித் யாதவ். இவர் மேவாத்தின் பஜ்ரங்தளம் பசு பாதுகாவலர் படைக் குழுவின் தலைவராக உள்ளார். தனது பாலிடெக்னிக் கல்வி முதல் மோனு, பஜ்ரங்தளம் அமைப்பில் இணைந்து பணியாற்றுகிறார்.

இவரது யூடியூப் பக்கத்துக்கு சுமார் 2 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். ஃபேஸ்புக்கில் சுமார் 83,000 பேரும் மோனுவை பின் தொடர்ந்துள்ளனர். இதன் முகப்புகளில் மோனு துப்பாக்கி ஏந்தியபடியே காட்சி தருகிறார். மோனு மீது, 2019-இல் முதல்முறையாக கொலை முயற்சி வழக்கு பதிவானது. ஹரியாணாவின் பட்டோடி கிராமம், குருகிராமிலும் இரண்டு குற்றவியல் வழக்குகள் பதிவாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x