Last Updated : 12 Sep, 2023 08:01 PM

 

Published : 12 Sep 2023 08:01 PM
Last Updated : 12 Sep 2023 08:01 PM

கர்நாடகாவில் 7,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

கோப்புப் படம்

பெங்களூரு: கர்நாடகாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக மாவட்டவாரியாக சுகாதார‌த் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அதில் மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதில் பெங்களூருவில் மட்டும் 4 ஆயிரம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கு பரவல் காரணமாக பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கொசுவை அழிக்கும் பணியில் பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் இருப்பிடத்தை சுற்றிலும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

முதல்வர் சித்தராமையா உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு வலியுறுத்தினார். அதற்கேற்ப மாநிலம் முழுவதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறோம். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து, சுகாதார சீர்கேட்டை தடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x