Last Updated : 18 Aug, 2023 09:40 AM

40  

Published : 18 Aug 2023 09:40 AM
Last Updated : 18 Aug 2023 09:40 AM

”இந்து மதம் பழமையானது; பெரும்பாலான முஸ்லிம்கள் இந்துவாக இருந்தவர்களே” - குலாம் நபி ஆசாத் கருத்து

குலாம் நபி ஆசாத் | கோப்புப் படம்

புதுடெல்லி: பெரும்பாலான முஸ்லிம்கள் இந்துவாக இருந்தவர்கள், இந்து மதம் பழமையானது என ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரான குலாம் நபி ஆஸாத் கருத்து கூறியுள்ளார். ஜனநாயக முற்போக்கு சுதந்திரக் கட்சியின்(டிபிஏபி) தலைவரான இவர், முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.

ஜம்மு-காஷ்மீரின் முதல்வராக 2004 முதல் 2008 வரை இருந்த குலாம்நபி, 2014 முதல் 2021 வரை மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். கடந்த ஆகஸ்ட் 26, 2022 இல் காங்கிரஸை விட்டு வெளியேறி தனியாகப் புதுக்கட்சி துவங்கினார்.

இதன் சார்பில் தற்போது ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிடவும் தயாராகி வருகிறார். இதற்காக மாநிலம் முழுவதிலும் பிரச்சாரம் செய்து வரும் குலாம் நபி, நேற்று தோதா மாவட்டத்தின் பல மேடைகளில் பேசினார்.
தனது உரையில் டிபிஏபி தலைவர் குலாம் நபி கூறியதாவது: சில முஸ்லிம்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் எனவும், பலர் இங்கேயே இருந்தவர்கள் என்றும் சில பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இவர்கள் வெளியிலிருந்து வந்தவர்களும் அல்ல, உள்ளூரைச் சேர்ந்தவர்களும் அல்ல. இஸ்லாம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. ஆனால், இந்து மதம் என்பது மிகவும் பழமையானது.
எனவே, பெரும்பாலான முஸ்லிம்கள், இந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்கள். சுமார் 20 சதவிகிதத்தினர் மட்டுமே முகலாயர்கள் படையுடன் வெளியிலிருந்து வந்தவர்கள். இதற்கான உதாரணத்தை காஷ்மீரில் பார்க்கலாம்.

இங்கு 600 வருடங்களுக்கு முன் எவரும் முஸ்லிம்களாக இருக்கவில்லை. இந்து மதத்தில் பிறந்து அனைவருமே முஸ்லிம்களாக மதம் மாறியவர்களே. காஷ்மீரின் பெரும்பாலான காஷ்மீர் பண்டிட்டுகள் முஸ்லிம்களாக மதம் மாறியவர்கள்தான்.

இந்துக்கள் இறக்கும்போது அவர்களது உடல் சிதையூட்டப்படுகிறது. இதன் சாம்பல் நதிகளில் கலக்கப்படுகின்றன. பிறகு இந்த நீர் குடிநீராகவும் நாம் பருகுகிறோம். சாம்பலான பின் அதைப் பற்றி எவரும் கவலைப்படுவதில்லை.

இதேபோல், முஸ்லிம்களின் எலும்பும், சதையும் மண்ணில் புதைக்கப்படுகிறது. இந்த உடல் நம் நாட்டின் மண்ணில் கலக்கிறது. அனைத்து இந்து, முஸ்லிம்களும் இந்த மண்ணில்தான் வாழ்கின்றனர். இதில் என்ன வித்தியாசம் உள்ளது?

இதனால், மதத்தின் பெயரில் அரசியல் செய்பவர்கள் வலிமை இல்லாதவர்கள். இந்த மதங்களை வாக்கு அரசியலில் பயன்படுத்தக் கூடாது. தேர்தலில் வாக்களிக்கும் போது இந்து, முஸ்லிம் எனப் பிரித்து பார்ப்பதும் தவறு ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிகளில் தொடர்ந்து பல்வேறு துறைகளில் மத்திய அமைச்சராக இருந்தவர் குலாம்நபி ஆஸாத். இவர், காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x