Published : 29 Nov 2017 09:49 AM
Last Updated : 29 Nov 2017 09:49 AM

பாதுகாப்பு குறைக்கப்பட்ட விவகாரம் லாலுவுக்கு ஏன் இவ்வளவு பயம்? - பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கேள்வி

‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட விவகாரத்தில் லாலு பிரசாத்துக்கு ஏன் இவ்வளவு பயம்? என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது ஆய்வு செய்து மாற்றியமைத்து வருகிறது. இதன்படி பிஹாரைச் சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்ட ‘இசஸ் பிளஸ்’ பாதுகாப்பு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது.

இதற்கு லாலு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லாலுவுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு மத்திய அரசும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருமே பொறுப்பு என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இசட் பிளஸ் பாதுகாப்பை விவிஐபி-க்கள் பெரும்பாலும் அந்தஸ்தின் அடையாளமாகவே கருதுகின்றனர். 69 வயது பிஹார் அரசியல்வாதிக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்றால் என்எஸ்ஜி போன்ற மத்திய படைகள் இனி பாதுகாப்பு அளிக்காது என்றே அர்த்தம். என்றாலும் மாநில அரசின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்எஸ்ஜி) ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கும்.

உங்களைச் சுற்றி எப்போதும் என்எஸ்ஜி மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் நூற்றுக்கணக்கில் இருக்க வேண்டும், இதன் மூலம் பிறரை அச்சுறுத்த வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். இதுதான் உங்களின் துணிச்சலான ஆளுமையின் உண்மையான முகமா?.

இவ்வாறு நிதிஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x