Published : 08 Aug 2023 01:00 PM
Last Updated : 08 Aug 2023 01:00 PM

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் திரிணமூல் காங். எம்.பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட்

டெரிக் ஓ பிரையன் | கோப்புப்படம்

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி டெரிக் ஓ பிரையன் எஞ்சிய மழைக்கால கூட்டத்தொடர் முழுவதுக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவைக்கு கட்டுப்படாத அத்துமீறிய செயல்களால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால தொடரின் இன்றையக் கூட்டம் இரு அவைகளிலும் காலை 11 மணிக்கு தொடங்கியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், காலையில் மாநிலங்களவை தொடங்கியதும் அன்றைய அலுவல்களுக்கான காகிதங்கள் உறுப்பினர்களின் மேஜை மீது வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, இன்று மணிப்பூர் விவகாரம் குறித்து விதி 267-ன் கீழ் வழங்கப்படுள்ள அனைத்து நோட்டீஸ்களும் நிராகரிக்கப்பட்டுவதாக அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்தார். அப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பி டெரிக் ஓ பிரையன் எழுந்து நின்று பிரச்சினையை எழுப்பினார். சத்தமான குரலில், "விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. ஆனால் அரசு விரும்பும் வழியில் இல்லை" என்று தெரிவித்தார்.

அவரது பேச்சுனுடே வந்து பேசிய அவைத் தலைவர் தன்கர், ஓர் உறுப்பினர் உரிமைப் பிரச்சினையை எழுப்பிகிறார் என்றால், அவரும் அவ்வாறே செயல்பட வேண்டும். உரையாற்றக் கூடாது. எந்த விதியின் கீழ் உரிமை பிரச்சினை எழுப்பப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும்" என்றார் இதனைத் தொடர்ந்து மேலும் உரத்த குரலில் பேசிய டெரிக் ஓ பிரையன், "விதி 267... இந்த விதியின் கீழ் மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டன" என்றார்.

அப்போது அவைத் தலைவர், டெரிக் ஓ பிரையனின் பெயரை அழைத்தார். இதனைத் தொடர்ந்து பியூஷ் கோயல், ‘தொடர்ந்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, அவைத் தலைவரின் வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் இருப்பது, அவையில் தொடர்ந்து குழப்பம் விளைவிப்பது போன்ற கட்டுப்படாத காரணங்களால் திரிணமூல் எம்பி டெரிக் ஓ பிரையனை இடைநீக்கம் செய்வேண்டும்’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து டிஎம்சி மாநிலங்களைவை எம்.பி. டெரிக் ஓ பிரையன் மீதமுள்ள மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவைத் தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டார்

267 விதியை தொடர்ந்து வலியுறுத்திய டெரிக்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் குறித்து விதி 267-ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின்கோரிக்கையை டெரிக் ஓ பிரையன் மிகவும் தீவிரமாக வலியுறுத்தி வந்தார். இதனால் அவைத் தலைவருக்கும் டெரிக்குக்கும் அவையில் பல முறை காரசாரமான விவாதம் நடந்துள்ளது. மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற நோட்டீஸ் குறித்த பேச்சின்போது அவைத் தலைவர் ஜக்தீர் தன்கருக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டெரிக் ஓ பிரையனுக்கும் இடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

மழைக்காலக் கூட்டத் தொடரின் 7-வது நாளில் அவையில் பேசிய மாநிலங்கள் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், "மரியாதைக்குரிய உறுப்பினர்களே கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து தினமும் விதி 267-ன் கீழ் அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எண்ணற்ற நோட்டீஸ்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 23 வருடங்களில் விதி 267ன் கீழ் வழங்கப்பட்ட எத்தனை நோட்டீஸ்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது இந்த அவைக்கு நன்றாக தெரியும்.

நாடாளுமன்ற நடவடிக்கையின் இதயம்: இந்தப் பின்னணியில், நான் அந்தச் சூழ்நிலையை (267 விதியின் கீழ் விவாதிக்க வேண்டும்) தினமும் எதிர்கொள்கிறேன். இதன் விளைவுகளை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று ஒட்டுமொத்த தேசமே கேள்வி நேரத்தை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. கேள்வி நேரம் என்பது நாடாளுமன்ற நடவடிக்கையின் இதயம் போன்றது என்று விளக்கிக் கொண்டிருக்கும்போதே, "அதை நாங்களும் உணர்ந்திருக்கிறோம்" என்று திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் குரல் தெரிவிக்கிறார். அதற்கு அவைத் தலைவர் “உங்களுக்குத் தெரியும் என்பது எனக்கும் தெரியும். உங்களுக்கு தெரியும் என்பதை விளக்க வேண்டியதில்லை, காதுகளைத் திறந்து வைத்து அமைதியாக கேளுங்கள்” என்று கூறினார்.

நாடகங்களை உருவாக்க வேண்டாம்: அப்போது, “நாங்கள் அதை உணர்தே இருக்கிறோம்” என்று தனது கோரிக்கையை ஓ பிரையன் வலியுறுத்திக்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து கோபமடைந்த அவைத் தலைவர், "காதுகளைத் திறந்து அமைதியாக உங்கள் இருக்கையில் அமருங்கள். டெரிக் ஓ பிரையன் நாடகங்களை உருவாக்குவது உங்களுடைய பழக்கமாகிவிட்டது. ஒவ்வொருமுறையும் வேகமாக எழுந்து முந்திக் கொண்டு பேசுவது உங்களுடைய தனிச் சிறப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் காட்டவேண்டிய குறைந்தபட்ச விஷயம் அவைத் தலைமைக்கு மரியாதை தருவது. நான் ஏதாவது சொல்லும்போது நீங்கள் கொதித்தெழுந்து ஒரு நாடகத்தை உருவாக்குகிறீர்கள்" என்று தெரிவித்தார்.

விதியை பேசுகிறேன்: இருந்தும் மனம் தளராதவராக அவைத் தலைவரின் நாடகம் என்ற பேச்சுக்கு கடுமையான எதிப்புத் தெரிவித்த பிரையன், மேஜையேத் தட்டியபடி “நான் நாடகங்களை உருவாக்கவில்லை. நான் சபை விதிகளையே மேற்கோள் காட்டுகிறேன். மணிப்பூர் விவகாரத்தில் விதி 267 தீவிரமான விவாதம் அவசியம்” என்றார். அதற்கு அவைத் தலைவர் "மேஜையில் தட்டாதீர்கள்.. மேஜையில் தட்டாதீர்கள்.. இது நாடகம் இல்லை" என்றார் கோபமாக.

எதிர்க்கட்சிகளுக்கும் மரியாதை கொடுங்கள்: முன்னதாக, மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளில் இது போன்ற காரசாரமான விவாதம் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரையனுக்கு இடையே நடந்தது. அன்று மாநிலங்களவைக் கூடியதும் அவையில் பேசிய அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், அன்று விவாதத்துக்காக விதி 176-ன் கீழ் 11 நோட்டீஸ்களும், விதி 267-ன் கீழ் 27 நோட்டீஸ்களும் அளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். அப்போது விதி 176-ன் கீழ் நோட்டீஸ் அளித்தவர்களின் பெயர்களை அவர்கள் சார்ந்த கட்சிப் பெயருடன் சேர்த்து வாசித்தார்.

இதனைத் தொடர்ந்து, விதி 267-ன் கீழ் 27 நோட்டீஸ் அளித்த எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் பெயர்களை குறிப்பிடும்போது, அவர்களின் கட்சியின் பெயர்களைக் குறிப்பிடாமல் உறுப்பினர்களின் பெயர்களை மட்டும் வாசித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரிணமூல் கட்சியைச் சேர்ந்த டெரெக் ஓ பிரையன், விதி 176 ன் கீழ் நோட்டீஸ் அளித்தவர்களின் பெயர்கைளைப் போலவே இவர்தளின் பெயர்களையும் கட்சிப் பெயருடன் சேர்த்து வாசிக்க வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களின் பெயர்களை அவைத்தலைவர் வாசிக்கும்போது, "எந்தக் கட்சி? எந்தக் கட்சி? எனக்கு கட்சித் தெரிவேண்டும்!" என்று எழுந்து நின்று முழக்கமிட்டார். இதனைத் தொடர்ந்து ஓ. பிரையனைப் பார்த்து அவைத் தலைவர் "முதலில் உங்கள் இடத்தில் உட்காருங்கள்" என்றார். அதனை ஏற்க மறுத்த ஓ பிரையன், கூப்பிய கரங்களுடன், பாஜக எம்.பி.,களின் பெயர்களை கட்சி சார்புடன் வாசித்த நீங்கள் அதே மரியாதையை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிகளுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரையானை அவரது இருக்கையில் அமருமாறு சில முறை கூறினார். பின்னர் டெரிக் ஓ பிரையன் உங்கள் இருக்கையில் அமருங்கள். நீங்கள் அவைத் தலைமையை எதிர்க்கிறீர்கள் என்று கூறினார்.

இந்தப் பின்னணியில், ஆளுங்கட்சி மீதான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடக்கும் நிலையில், டெரிக் ஓ பிரையன் மீதமுள்ள கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x