Published : 24 Nov 2017 12:50 PM
Last Updated : 24 Nov 2017 12:50 PM
பத்மாவதி திரைப்படத்தை வரலாற்று பேராசிரியர்கள் முன்னிலையில் திரையிட்டு ஒப்புதல் பெற்ற பின்னரே வெளியிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறு திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
திரைப்படம் திரையிட தயாராகி வரும் நிலையில், அப்படத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கலாகின. ஆனால், அவற்றை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில், பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில் ‘‘பத்மாவதி திரைப்படத்தை சென்சார் போர்டு தவிர, தலைசிறந்த மூன்று பல்கலைகழக வரலாற்று பேராசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் திரையிட வேண்டும். அவர்களின் ஒப்புதலுக்கு பிறகே பத்மாவதி படத்தை திரையிட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், பத்மாவதி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள தகவல்கள் தெரியாமல் முன்கூட்டியே இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது எனக்கூறி உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதனிடையே டெல்லியில் பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக ஆசாத்பூர் ரயில் நிலையம் முன், ராஷ்ட்ரீய சேத்னா மஞ்ச் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது, சஞ்சய் லீலா பன்சாலியின் உருவபொம்மையை அவர்கள் எரித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT