Published : 24 Nov 2017 09:35 AM
Last Updated : 24 Nov 2017 09:35 AM

வெளிநாடுகளில் ‘பத்மாவதி’யை திரையிட தடை கோரி மனு: 28-ம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

வெளிநாடுகளில் ‘பத்மாவதி’ திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிட தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வரும் 28-ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்தை வெளியிட ராஜபுத்திர அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இயக்குநர் பன்சாலியை சிரச்சேதம் செய்வோம், நடிகை தீபிகா படுகோனின் மூக்கை அறுப்போம் என்று கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. இதன்காரணமாக பத்மாவதி திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்மாவதி திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிட தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

இதனை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திர சூட் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வரும் 28-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

படத்தின் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கக் கோரி ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதனிடையே பத்மாவதி திரைப்படத்தை பிரிட்டனில் வெளியிட அந்த நாட்டு தணிக்கை வாரியம் முறைப்படி அனுமதித்துள்ளது. இதுகுறித்து பத்மாவதி படத்தயாரிப்பு வட்டாரங்கள் கூறியபோது, இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளித்த பிறகே வெளிநாடுகளில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிடுவோம் என்று தெரிவித்தன.

பத்மாவதி திரைப்படத்தை திரையிட மத்திய பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்டோர் படத்துக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x