Last Updated : 10 Apr, 2024 04:12 AM

 

Published : 10 Apr 2024 04:12 AM
Last Updated : 10 Apr 2024 04:12 AM

‘கிருஷ்ணகிரியில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை’ - சாத்தியம் எப்படி?

காவேரிப்பட்டணம் அருகே பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்ட நீர் உறிஞ்சி கிணறு உள்ள பகுதியில் செல்லும் தண்ணீர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையின் கீழ் பகுதி தென்பெண்ணை ஆற்றில் உள்ள 19 கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பயன்பெறும் கிராம மக்களுக்குக் கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநீர் திட்டப் பணியை ஆய்வு செய்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கிருஷ்ணகிரி கோட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக 'ஜீரோ' நிலையில் உள்ளது. மேலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தென் பெண்ணை ஆற்று நீரை அடிப்படையாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என ‘இந்து தமிழ் திசை’யில் கடந்த 7-ம் தேதி செய்தி வெளியானது.

கிணறுகளில் ஆய்வு: இதையடுத்து, குடிநீர் வடிகால் வாரிய கிருஷ்ணகிரி திட்ட கோட்ட அலுவலர்கள் கடந்த 7-ம் தேதி தென் பெண்ணை ஆற்றில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்ட நீர் உறிஞ்சி கிணறுகளை ஆய்வு செய்தனர். மேலும், இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி அணையின் கீழ் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் பராமரிப்பில் 19 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு, பர்கூர், ஊத்தங்கரை பேரூராட்சிகள் மற்றும் 916 இதர குடியிருப்புகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆற்றில் நீரோட்டம்: தற்போது வரை தென்பெண்ணை ஆற்றில் நீரோட்டம் உள்ளதால், நீர் உறிஞ்சு கிணறுகள் உள்ள பகுதிகளில் 10 நாட்களுக்கு மேல் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 42 அடிக்குத் தண்ணீர் உள்ளது. மேலும், கோடை மழை கைகொடுக்காவிட்டாலும், மாவட்ட நிர்வாகம் மூலம் அணையிலிருந்து குடிநீர் தேவைக்கு ஆற்றில் தொடர்ந்து நீர் திறந்து விடப் படும். இதன் மூலம் குடிநீர் திட்ட நீர் உறிஞ்சு கிணறுகளுக்குத் தட்டுப்பாடின்றி நீரோட்டம் கிடைக்கும்.

தட்டுப்பாடு தீர்க்கப்படும்: குறிப்பாக, கிருஷ்ணகிரி அணையிலிருந்து இருமத்தூர் வரையில் உள்ள நீர் உறிஞ்சு கிணறுகளுக்கு நீரோட்டத்தில் பாதிப்பு வராது. இருமத்தூருக்கு அடுத்துள்ள 3 நீர் உறிஞ்சி கிணறுகளுக்கு நீரோட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், ஈச்சம்பாடி அணை நீரைக் கொண்டு தட்டுப்பாடு சரி செய்யப்படும். மேலும், குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தினசரி ஒரு நபருக்கு 40 லிட்டரும், உள்ளூர் குடிநீர் திட்டங்கள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால். கோடை காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் போதிய குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x