Published : 09 Apr 2024 04:04 AM
Last Updated : 09 Apr 2024 04:04 AM

கடம்பூர் வனப்பகுதியில் கடும் வறட்சியால் நீர் தேடி வந்த யானை அகழியில் விழுந்து சுகவீனம்

கடம்பூர் அருகே நீர் தேடி வந்த யானை அகழியில் விழுந்து சுகவீனம் அடைந்ததால், வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஈரோடு: கடம்பூர் அருகே நீர் தேடி வந்த யானை அகழியில் விழுந்து உயிருக்கு போராடி வருகிறது. வனத்துறை மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. கோடை வெப்பம் தீவிரமாகி உள்ளதால், வனப் பகுதியில் வறட்சி ஏற்பட்டு, குட்டை, நீரோடைகள் வறண்டு போயுள்ளன. இதன் காரணமாக உணவு மற்றும் நீர் தேடி யானைகள் சமவெளிப் பகுதிக்கு வரும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. சத்தியமங்கலம் - மைசூரு சாலையில் வரும் வாகனங்களை மறித்து யானைகள் உணவு தேடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

அதேபோல், வனப்பகுதியை ஒட்டிய விளை நிலங்களுக்குள் புகுந்து, வாழை, கரும்பு உள்ளிட்டவற்றை யானைக் கூட்டம் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடம்பூரை அடுத்த குரும்பூர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு பெண் யானை ஒன்று நீர் தேடி வந்துள்ளது. அப்பகுதியில் தங்கவேலு என்பவருக்குச் சொந்தமான தோட்டம் அருகே வெட்டப்பட்ட அகழியில் யானை தவறி விழுந்தது. இதுகுறித்து கடம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் அங்கு வந்து யானைக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளனர். உணவு மற்றும் நீர் இல்லாததால் யானை பலவீனமாக இருப்பதால், அதற்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் யானையை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

யானையின் உடல்நிலை சற்றி தேறியதும், அதனை மீண்டும் வனப் பகுதிக்குள் அனுப்ப வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால், வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் நீர் நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x