Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

அதிமுக விஐபி தொகுதிகளை தென் மாவட்டங்களில் கேட்கும் பாஜக

அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பாஜக 35 முதல் 40 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாஜகவுக்கு 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தலைமை கறார் காட்டுகிறது.

இது ஒருபுறமிருக்க தென் மாவட்டங்களில் அதிமுக முக்கிய பிரமுகர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொகுதியான சிவகங்கை, அதிமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் போட்டியிட விரும்பும் தொகுதியான காரைக்குடி ஆகியவற்றை பாஜகவினர் கேட்டு வருகின்றனர்.

அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் தொகுதியான ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் சீனிவாசனின் தொகுதியான திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகளையும் பாஜக கேட்டு வருகிறது. மேலும், அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மானாமதுரை, சாத்தூர், பரமக்குடி உள்ளிட்ட தொகுதிகளையும் பாஜக கேட்டு வருகிறது. இதுதவிர கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டுமெனவும் பாஜக வலியுறுத்தி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள அதிமுக முக்கிய பிரமுகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘ இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் பழனிசாமி உள்ளார். இதனால் அதிமுக வெற்றிபெறும் தொகுதிகளையும், அமைச்சர், மாவட்டச் செயலாளர் போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் எக்காரணத்தைக் கொண்டும் பாஜகவுக்கு அதிமுக தலைமை விட்டுத் தராது. ஏற்கெனவே, அமைச்சர்களை அவரவர் தொகுதிகளில் தேர்தல் பணிகளைதொடங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் அத்தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்க வாய்ப்பில்லை’’ என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x