Last Updated : 23 Feb, 2021 03:15 AM

 

Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

காங்கிரஸ் கட்சியினரை மதிக்காத திமுக: நிர்வாகிகளிடம் குமுறிய ப. சிதம்பரம்

கூட்டணிக் கட்சி (திமுக) காங்கிரஸை மதிப்பதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிர்வாகிகளிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தமிழகத்தில் மத சார்பற்ற கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்தக் கூட்டணிக்கு திமுகவே தலைமை வகிக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலின்போதே கூட்டணிக் கட்சிகளை திமுக மதிப்பதில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தங்களை மதிக்க வேண்டுமென சிவகங்கை மாவட்டத்தில் நடந்துவரும் காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அக்கட்சி நிர்வாகிகள் புகார் கூறி வருகின்றனர். இதையடுத்து கட்சியினரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவே ப.சிதம்பரத்தின் பேச்சும் இருந்தது.

சிங்கம்புணரியில் இரு நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: கூட்டணிக் கட்சி (திமுக) உரிய மரியாதை தருவதில்லை என்ற குறை காங்கிரஸ் நிர்வாகிகளிடம் உள்ளது. பூத் கமிட்டி பணத்தை சரியாகப் பிரித்துக் கொடுப்பதில்லை என்பது நியாயமான குற்றச்சாட்டுதான். கூட்டணிக் கட்சியின் (திமுக) ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 20 பேர் இருக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் பூத் கமிட்டியில் வெறும் 5 (அ) 6 பேர் தான் உள்ளனர். நாமும் பூத் கமிட்டியில் 20 பேரை நியமித்தால்தான் நம்மை மதிப்பார்கள்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட திமுக முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப் பன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நமது தோழமை இல்லாமல் அவர் வென்றிருக்க முடியாது. அதேபோல் மக்களவைத் தேர்தலில் அவர்களின் தோழமை இல்லாமல் நாமும் வெற்றி பெற்றிருக்க முடியாது.

கூட்டணிக் கட்சிக்கு இணையான பலத்தை நாமும் காட்டினால்தான் நம்மை மதிப்பர். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக என சிதம்பரம் நேரடியாகக் கூறாவிட்டாலும் அக்கட்சியைத்தான் சாடினார் என காங்கிரஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x