Published : 19 Feb 2021 03:22 AM
Last Updated : 19 Feb 2021 03:22 AM

மக்கள் நீதி மய்யம் மாநாடு கேஜ்ரிவாலுக்கு அழைப்பு

சென்னையில் மார்ச் 7-ம் தேதி நடைபெற உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாட்டில் பங்கேற்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி மதுரையில் தொடங்கினார். கட்சி தொடங்கியுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, நட்பு ரீதியாக கமல்ஹாசன் அவருடன் அவ்வப்போது பேசி வருகிறார்.

இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, சென்னையில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநாட்டுக்கு அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் வண்டலூர் அருகே உள்ள மண்ணிவாக்கத்தில் மார்ச் 7-ம் தேதி மாநாடு நடைபெறும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் அறிவித்தார்.

இந்தநிலையில், தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஆம் ஆத்மி கட்சியின் மாநில நிர்வாகிகள் கமல்ஹாசனை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினர்.

இதனை தொடர்ந்து, சென்னையில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் மாநாட்டில் பங்கேற்க, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை அழைக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சென்னையில் நடைபெறும் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அரவிந்த் கேஜ்ரிவாலுடன் கட்சி தொடங்கியதில் இருந்தே கமல்ஹாசன் நட்புரீதியாக பழகி வருகிறார்.

எனவே, சென்னையில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாட்டில் பங்கேற்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அவரும் மாநாட்டில் பங்கேற்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x