Last Updated : 15 Mar, 2019 06:32 PM

 

Published : 15 Mar 2019 06:32 PM
Last Updated : 15 Mar 2019 06:32 PM

வேட்பாளர் அறிவிக்காத சூழலில் பிரச்சாரத்தைத் தொடங்குவதாக அறிவித்து ஒத்திவைத்த புதுச்சேரி காங்கிரஸ்

வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் இன்று மாலை முதல் கை சின்னத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவித்து திடீரென்று ஒத்திவைத்தனர்.

மக்களவைத்  தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் கட்சித் தலைமையகத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத்தலைவர் நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி மற்றும் மாநிலத் தலைவர் நமச்சிவாயம், இன்று மாலை 5 மணி முதல் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மாநில எல்லைப் பகுதியான கனகச்செட்டிக்குளத்திலிருந்து தொடங்குகிறது என்று தெரிவித்தனர்.

பின்னர் முதல்வர் நாராயணசாமி, ''இலவச அரிசி திட்டம், ஸ்மார்ட்சிட்டி, விவசாயிகள் கடன் ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம் என்றும் வேட்பாளர் என்பது இரண்டாம் பட்சம். கை சின்னத்தை வைத்து தங்கள் பிரச்சாரம் நடைபெறும்'' என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பிரச்சாரம் ரத்து செய்வதாக காங்கிரஸ் அலுவலகம் அறிவித்தது. இது தொடர்பாக விசாரித்தபோது, வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு பிரச்சாரம் தொடங்கலாம் என கட்சித் தலைமை தெரிவித்ததால் பிரச்சாரம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x