Last Updated : 10 Mar, 2019 07:19 AM

 

Published : 10 Mar 2019 07:19 AM
Last Updated : 10 Mar 2019 07:19 AM

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக, அதிமுக விரும்புவது ஏன்?

தமிழகம் முழுவதும் தேமுதிகவுக்கு பரவலாக இருக்கும் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டே, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுகவும் பாஜக வும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 37 அதிமுக எம்பிக் களால் எந்த பயனும் இல்லை என்று விமர்சித்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பும் எனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று, அமைச்சர் டி.ஜெயக்குமாரோ, ‘கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது இது போன்ற விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம். மறப்போம் மன்னிப்போம்’ என்றார்.

தேமுதிகவை கண்டிக்காததற்கு காரணம் தேமுதிகவை கூட்டணிக் குள் கொண்டு வரவேண்டும் என்பதுதான் எனக் கூறப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை, 21 சட்டப்பேரவை இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டால், குறைந்தபட்சம் 15 தொகுதியிலாவது வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத் தில் உள்ளது. இதனால், அந்த 21 தொகுதிகளை உள்ளடக்கியமக்களவைத் தொகுதிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக் கிறது. இதுதவிர, மக்களவைத் தொகுதிகளை பெருமளவுக்கு வெல்லும்பட்சத்தில், பாஜக ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் இடம்பெறும் திட்டமும் உள்ளது. இதை சேலத்தில் முதல்வர் பழனிசாமி பகிரங்கமாகவே தெரிவித்தார்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, அதிமுக தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளை வென்றது. அப்போது, மோடியை எதிர்த்து அரசியல் செய்து வெற்றிபெற்றார் ஜெயலலிதா. ஆனால், தற்போதைய நிலை வேறு.

திமுகவும் பலமான கூட்டணியை அமைத்துள்ளது. அமமுகவின் டிடிவிதினகரன், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோர் தனித்தனியாக களம் காண்பதால், வாக்குகள் பிரியும் நிலை உள்ளது. எனவே, குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை உடைய கட்சிகளை இணைத்து போட்டியிடுவது அதிமுகவுக்கு அவசியமாகிவிட்டது.

அதிலும், பாமகவை பொறுத்த வரை வடமாவட்டங்களில் செல்வாக்குடன் திகழ்கிறது. அதேநேரம், தேமுதிக தமிழகம் முழுவதும் பரவலாக வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது. இந்த வாக்குகள் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் அவசியம் என்ப தாலேயே, இரு கட்சிகளும் தேமுதிகவை எப்படியாவது கூட்ட ணிக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றன.

மேலும், பாமகவுக்கு கிடைக்கும் வாக்குகளை பொறுத்தவரை அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற வேல்முருகன் தரப்புக்கும் காடுவெட்டி குரு ஆதரவு வாக்கு என பிரிய வாய்ப்புள்ளதாக அதிமுக கருதுகிறது. ஆனால், தேமுதிகவுக்கு தற்போதுள்ளதாக கூறப்படும் 2.1 சதவீதம் வாக்குகள் சிதற வாய்ப்பில்லை என்பதால் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது அதிமுகவின் கணக்காகும். இதேகணக்கை கொண்டுதான் தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்கவேண்டும் என பாஜகவும் பாமகவும் கருதுகிறது. எனவே, தேமுதிகவுடன் விரைவில் கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுக முனைப்புக் காட்டி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x