Published : 24 Mar 2019 06:40 AM
Last Updated : 24 Mar 2019 06:40 AM

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி?

மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது வழக்கம். அக்கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், கூடுதலாக ஒரு தொகுதியில் (தென் மாநிலங்களில்) அவர் போட்டியிட வேண்டுமென, அம்மாநிலங்களைச் சேர்ந்தகாங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நேரு குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா காந்தி உட்பட சிலர் தென் மாநிலங்களில் போட்டியிட்டு உள்ளனர். 2009-ம் ஆண்டு தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும், கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியிலும் சோனியா காந்தி போட்டியிட்டார் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி ஒப்புக் கொண்டு உள்ளதாக, பத்திரிகை ஒன்றுக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதை, பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன் சாண்டியும் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால், கேரள காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி, நீலகிரி மாவட்ட காங்கிரஸாரும் உற்சாகமடைந்து உள்ளனர்.

மாவோயிஸ்ட் நடமாட்டம்மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சல் தடுப்புப் பிரிவான தண்டர்போல்ட் போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் தனியார் ரிசார்ட்டில் பணம் கேட்டு மிரட்டியதால், தண்டர்போல்ட் போலீஸாரால் ஜலீல் என்ற மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் வந்த இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு கருதி வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட அனுமதிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வயநாடு தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக சித்திக் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x