Last Updated : 24 Mar, 2019 10:01 AM

 

Published : 24 Mar 2019 10:01 AM
Last Updated : 24 Mar 2019 10:01 AM

உட்கட்சிப் பூசல், நீண்ட சர்ச்சைகளுக்குப் பிறகு விருதுநகர் காங். வேட்பாளராக மாணிக்கம் தாகூர் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த விருதுநகர் தொகுதியை விட்டுக் கொடுக்காமல் கேட்டுப்பெற்ற காங்கிரஸ் கட்சியில் வேட்பாளரை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி ஏற்பட்டது. அத்தனை தடங்கல்களையும் கடந்து ஒருவழியாக மாணிக்கம் தாகூர் வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி வரலாற்றில் முக்கிய இடம்பெறுவது விருதுநகர் மாவட்டம். இம்மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜர், 2 பிரதமர் களை நாட்டுக்கு அடையாளம் காட்டிய ‘கிங் மேக்கராக’ திகழ்ந்தார். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, பாரம்பரியம் மிக்க விருதுநகர் தொகுதியை விட்டுக்கொடுக்காமல் கேட்டுப்பெற்றது. ஆனால், இம்முறை யாரை விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவது என்பதில் காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

 சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கொடுக்கக் கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், சுதர்சன நாச்சியப்பனின் அண்ணன் மகனான மாணிக்கம் தாகூருக்கு இம்முறை விருதுநகர் தொகுதியில் வாய்ப்புக் கொடுக்கக் கூடாது என ப.சிதரம்பரம் தரப்பினரும் பிரச்சினையை கிளப்பினர். மேலும், விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூரை வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கணேசன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் காளிதாஸ், சிவகாசி முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கட்சியின் மேலிடத்துக்கு  தொடர்ந்து புகார் கடிதங்கள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட கோஷ்டி பூசலால் இம்முறை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விருதுநகரில் போட்டியிடலாம் என்ற பேச்சும் அடிபட்டது.

இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி இம்முறையும் களத்தில் இறங்கியுள்ளார் முன்னாள் எம்.பி மாணிக்கம் தாகூர். இவர், ராகுல்காந்தியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். எம்.பி.யாக இருந்தபோதும், இல்லாதபோதும் அடிக்கடி தொகுதிக்கு வந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வரு கிறார்.

விருதுநகரில் 3 ஆயிரம் வியாபாரிகளுக்கு ரூ.50 கட்டணத்தில் மதுரை சென்றுவர ரயிலில் சீசன் டிக்கெட் பெற்றுக்கொடுத்தது. தீப்பட்டி உற்பத்தியாளர்களுக்குள் குழுமம் அமைத்துக் கொடுத்தது, மாணவர்களுக்கு கல்விக் கடன் பெற்றுத் தந்தது. பட்டாசுத் தொழிலைக் பாதுகாக்க மாநாடு நடத்தியது ஆகிய பணிகள் காரணமாக மாணிக்கம் தாகூருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே உள்ளூர் கட்சியினரிடையே எழுந்துள்ள எதிர்ப்புகள், கோஷ்டி பூசலால் நடைபெறும் உள்ளடி வேலைகள் போன்றவற்றை திறம்பட சமாளித்து கரை சேருவாரா என்பது தேர்தலின் முடிவில்தான் தெரியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x