Last Updated : 18 Mar, 2019 10:36 AM

 

Published : 18 Mar 2019 10:36 AM
Last Updated : 18 Mar 2019 10:36 AM

சேலத்தில் 2-வது இடத்துக்கு அதிமுக-திமுக இடையே போட்டி: அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் பேட்டி

சேலம் மக்களவைத் தொகுதியில் அமமுக வெற்றிபெறும், அதிமுக, திமுக-வுக்கு இடையே 2-வது இடத்துக்கான போட்டி தான் நிலவுகிறது என்று அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் பிளவுபட்ட அதிமுக-வில் ஜெயலலிதா அணியில் சேலம் வீரபாண்டி தொகுதியில் எஸ்.கே.செல்வமும், எடப்பாடி தொகுதியில் தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் போட்டியிட்டனர். தேர்தலில் எஸ்.கே.செல்வம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். எடப்பாடி வெற்றி பெற்றார். அன்று தொடங்கி இருவருமே சேலம் மாவட்ட அதிமுக-வில் தனித்தனி அணிகளாக இருந்து வந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓபிஎஸ் அணியில் இணைந்து, பின்னர் டிடிவி அணிக்கு எஸ்.கே.செல்வம் மாறினார்.

இந்நிலையில், பெரும் பாலானவர்கள் எதிர்பார்த்தது போல, அவரையே சேலம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அமமுக களமிறக்கியுள்ளது. இந்நிலையில், சேலத்தில் தான் போட்டியிடுவது குறித்து எஸ்.கே.செல்வம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:சேலம் மாவட்டம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கோட்டை. சேலம் மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளராக இருந்துள்ளேன். சேலம் மாவட்ட அதிமுக-வில் இன்றைய எம்பி உள்பட நிர்வாகிகள் பலரும் என்னால் பரிந்துரைக்கப்பட்டவர்கள், எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். ஜெயலலிதா இருந்தபோது, நீட், ஜிஎஸ்டி, ஸ்டெர்லைட் உள்பட பல பிரச்சினைகளில் தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசை எதிர்த்து வந்தார்.

ஆனால், இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஜெயலலிதா எதிர்த்த பிரச்சினைகளில், பாஜக-வுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்த ஒரு காரணமே அதிமுக தோற்கடிக்க போதுமானது. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, மாற்றுக் கட்சியினரும் அமமுக-வுக்கு வருகின்றனர். சின்னம் என்பது வெற்றிக்கு அவசியம் என்றாலும் கூட, உள்ளாட்சித் தேர்தலில், 4 சின்னங்களை தனித்தனியாக கவனித்து, 4 வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

அதனால் அமமுக-வுக்கு சின்னம் ஒரு பிரச்சினையே கிடையாது. சேலம் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் 10 ஆயிரம் பேர் பொறுப்பாளர்களாக மட்டும் நியமித்துள்ளேன். தினகரன் சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கிடைத்தது போல, எழுச்சிமிகு வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, தேர்தலில் அமமுக வெற்றி பெறுவது உறுதி. சேலம் மக்களவைத் தொகுதியில் இரண்டாவது இடத்துக்குத் தான் அதிமுக-வும் திமுக-வும் போட்டியிடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x