Last Updated : 02 Mar, 2019 11:17 AM

 

Published : 02 Mar 2019 11:17 AM
Last Updated : 02 Mar 2019 11:17 AM

ராமநாதபுரத்தில் ஜான்பாண்டியன் போட்டி ?

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முதலிடத்தில் முக்குலத்தோர் வாக்காளர்களும், மூன்றாம் இடத்தில் ஆதிதிராவிட மக்களான தேவேந்திர குல சமூக வாக்காளர்களும் உள்ளனர். இத்தொகுதியில் முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடனை ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் தேவேந்திர குல சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இருந்தபோதிலும் இத்தொகுதியில் இதுவரை இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முக்கிய கட்சிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வில்லை.

சுயேச்சை யாக நின்ற இச்சமூகத்தினரும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது என அவரது கட்சியினர் கூறி வருகின்றனர். இதன் அறிகுறியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜான்பாண்டியனின் அரசியல் நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுகின்றன. குறிப்பாக ஜான்பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு முதுகுளத்தூரில் கபடிப் போட்டி, மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது.

மேலும் கோயில் கும்பாபிஷேகம், கட்சியினர், சமூகத்தினரின் வீட்டு விழாக்களில் ஜான்பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது அவர் கட்சி நிர்வாகிகளை சந்திப் பது, அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டார். ஜான்பாண்டியன் கடந்த 2011-ல் முதுகுளத்தூர், 2016-ல் திருவாடானை ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரது மனைவி பிரிசில்லா பாண்டியன் 2009-ம் ஆண்டு கூட்டணியின்றி ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 39,086 வாக்குகள் பெற்றார். ராமநாதபுரம் தொகுதியில் ஜான்பாண்டியன் போட்டியிட வேண்டும் என அவரது கட்சியினரும், ஆதரவாளர்களும் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, முக்கிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து ஜான்பாண்டியன் பேசி வருகிறார். கூட்டணி முடிவானால்தான் தொகுதி குறித்து முடிவு செய்ய முடியும். இருந்தாலும் எங்களுக்கு ராமநாதபுரம் தொகுதி சாதகமாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x