Published : 22 Feb 2019 08:36 AM
Last Updated : 22 Feb 2019 08:36 AM

தேர்தல் அறிக்கையில் என்னென்ன இருக்கணும்? - மக்களிடம் கருத்து கேட்கிறது திமுக: சமூக ஊடகங்கள் மூலம் அனுப்ப ஸ்டாலின் வேண்டுகோள்

மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்களையும், கருத்துகளையும் இ-மெயில், சமூக ஊடகங்கள் மூலம் அனுப்புமாறு பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் அறிக்கைதயாரிக்கும் பணியில் முக்கிய அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ள. அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுக்களை அமைத்து கட்சியினர், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு வருகின்றன. கருத்துக் கேட்பு கூட்டங்களையும் நடத்தி வருகின்றன. திமுகவில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘தமிழக முன்னேற்றத்தில் பங்கேற்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு. உங்கள் எண்ணங்களும் அரசேற அரிய தருணம். உங்கள் கனவுகளையும், புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் திமுக மக்களவைத் தேர்தல் அறிக்கையில் பகிர்ந்துகொண்டு எங்களோடு கரம் கோர்க்க வாருங்கள். அதல பாதாளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தை முன்னேற்றுவதில் உங்களுடைய கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன். உங்களுடைய கருத்துகளை dmkmanifesto2019@dmk.in என்ற இ-மெயில் முகவரிக்கும், சமூக ஊடகங்களில் #DMKmanifesto2019 என்ற ஹேஷ்டேக்கிலும் பிப்ரவரி இறுதிக்குள் தெரிவிக்கலாம்' என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x