Published : 02 May 2014 12:00 AM
Last Updated : 02 May 2014 12:00 AM

438 தொகுதிகளில் 66 சதவீதம் வாக்குப்பதிவு

நாடாளுமன்றத் தேர்தலில், 438 தொகுதிகளுக்கு இதுவரை நடைபெற்ற 7 கட்ட வாக்குப் பதிவுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு 57.61 சதவீதமாக இருந்தது. இந்த முறை 66.20 சதவீதமாக வாக்குப்பதிவு உயர்ந்துள்ளது. தபால் வாக்குகள் எண்ணப்படும்போது, இந்த சதவீதம் இன்னும் உயரலாம் என்று கருதப்படுகிறது.

இதுவரை சுமார் 44.28 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். நக்சல் தாக்குதல் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல், வெப்பம், தூரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

குஜராத்தில் 26 தொகுதிக ளுக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.. இது கடந்த முறை தேர்தலில் பதிவான எண்ணிக்கையை (47.89) விட அதிகம். அதேபோல பஞ்சாப்பில் 13 தொகுதிகளில் கடந்த முறை 70.04 சதவீதமாக வாக்குப்பதிவு இருந்த நிலை மாறி இந்த முறை 73 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வரலாறு காணாத அளவில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் முறையே 85 மற்றும் 76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தலா ஒரு தொகுதியைக் கொண்டிருக்கும் டாமன் மற்றும் டையூ இரண்டிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தோராயமாக 80 சதவீதம்.

ஒன்பது கட்டங்களாக நடை பெறும் இந்தத் தேர்தலில், இன்னும் 10 மாநிலங்களில், 105 தொகுதிகளில் மே 7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x