Published : 01 Dec 2023 06:05 AM
Last Updated : 01 Dec 2023 06:05 AM

வினா-வங்கி புத்தகம் ஜனவரியில் வழங்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா-வங்கி புத்தகங்கள் மீண்டும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கிவரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்ந்த வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுநர்கள் நியமனம் என்பது உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: பள்ளிக்கல்வித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை கையாளுவதற்கு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக நம்மிடம் ஒரே ஒரு சட்ட அலுவலர் மட்டுமே உள்ளார்.அவருக்கு உதவியாக சட்ட நுணுக்கங்கள் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஊதியம் வழங்க அனுமதி வழங்கப்படும்.

மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு 5 ஆண்டுகளுக்கு பின்பு கூட்டப்படுகிறது. ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பங்கு முக்கியமானதாகும். மேலும், 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வினா-வங்கிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது.

கரோனா பரவலுக்குபின் அது தயார் செய்யப்படாமல் இருந்து. வரும் ஜனவரி மாதத்தில் இருந்து மீண்டும் வினா வங்கி புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன், தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x