Published : 13 Apr 2023 04:02 AM
Last Updated : 13 Apr 2023 04:02 AM

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்: திமுக கவுன்சிலர் ‘போக்சோ’வில் கைது

கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் பக்கிரிசாமி

கடலூர்: விருத்தாசலத்தில் 6 வயது பள்ளி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளி தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்தி நகரில் உள்ள தனியார் நர்சரி, பிரைமரி பள்ளியின் தாளாளராக இருப்பவர் பக்கிரிசாமி (62). இவர், விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு திமுக கவுன்சிலராகவும் உள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது பள்ளியில் மழலையர் வகுப்பில் படிக்கும் 6 வயது சிறுமி ஒருவர் வழக்கம்போல கடந்த 11-ம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய சிறுமி, வலி ஏற்பட்டு அழுதுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். நடந்த விவரம் குறித்து சிறுமியிடம் மனநல மருத்துவர்கள் விசாரித்ததில், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் மகளிர் போலீஸார், அரசு மருத்துவமனைக்கு வந்து, சிறுமி மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பள்ளிக்கு சென்றும் விசாரித்தனர். சம்பவம் தொடர்பாக ஆசிரியர்களிடமும், பள்ளி தாளாளர் பக்கிரிசாமியிடமும் விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுமிக்கு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து
பக்கிரிசாமி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, விருத்தாசலம் மகளிர் காவல் நிலைய போலீஸார் நேற்று போக்சோ சட்டப்பிரிவின்கீழ் பக்கிரிசாமி மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x