Last Updated : 21 Feb, 2023 06:44 PM

 

Published : 21 Feb 2023 06:44 PM
Last Updated : 21 Feb 2023 06:44 PM

வடலூரில் குழந்தையை கடத்தி விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது

வடலூரில் குழந்தையைக் கடத்தி விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர்: வடலூரில் குழந்தையைக் கடத்தி ரூ.3.50 லட்சத்திற்கு விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய முக்கிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் அருள்முருகன் மனைவி சுடர்விழி (37). இவர் அவரது அக்கா சுதாவின் கணவர், புதுச்சத்திரம் பெத்தநாயக்கன் குப்பத்தை சேர்ந்த விஸ்வநாதனிடம் தன்னிடம் ஒரு குழந்தை உள்ளதாகவும், அதற்கு பிறப்புச் சான்றிதழ் வேண்டும் எனக் கூறியுள்ளார். விஸ்வநாதன் அந்தக் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற முயற்சி செய்து கிடைக்காததால், இந்தக் குழந்தையை வைத்திருந்தால் நீ வழக்கில் சிக்கி விடுவாய், அதனால் குழந்தையை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்து விடலாம் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து விஸ்வநாதன் கடலூர் ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் குழந்தையை தொட்டில் சேர்ப்பது குறித்து கேட்டுள்ளார். அப்போது, குழந்தை பாதுகாப்பு அலுவலர் கேட்ட கேள்விகளுக்கு விஸ்வநாதன் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

புதுச்சத்திரம் போலீஸார் விஸ்வநாதன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அவர் தனது மனைவியின் தங்கை வடலூரை சேர்ந்த சுடர்விழியிடம் குழந்தை உள்ளது எனக் கூறியுள்ளார். உடன் வடலூர் சென்ற போலீஸார் சுடர்விழியிடம் நடத்திய விசாரணையில், அவர் கடந்த 2022-ம் வருடம் டிசம்பர் மாதம் 13-ம் தேதி வடலூரை சேர்ந்த சித்த மருத்துவர் மெகருன்னிசாவிடம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து குழந்தையை வாங்கியதாக கூறியுள்ளார் .

இதனையடுத்து, போலீஸார் இன்று (பிப்.21) மெகருன்னிசாவை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மீது 2017-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் இதேபோல் ஒரு குழந்தை கடத்தல் வாழ்க்கு இருப்பதாகவும், இதேபோல் அவர் கீரப்பாளையம் நரிக்குறவர் காலனி சேர்ந்த ஷீலா, சீர்காழி சட்டநாதபுரம் ஆனந்தன் ஆகியோர் சேர்ந்து இதற்கு முன்பு மூன்று குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீஸார் மெகருன்னிசா (67), சுடர்விழி (37), சீர்காழி சட்டநாதபுரம் ஆனந்தன் (47), கீரப்பாளையம் கஜேந்திரன் மனைவி ஷீலா (37), ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர். மேலும், போலீஸார் நடத்திய விசாரணையில், இந்தக் குழந்தையை மெகருன்னிசா வடலூர் நரிக்குறவர் காலனி சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் வாங்கியதாகவும், ஆனந்த் கீரப்பாளையம் நரிக்குறவர் காலனி சேர்ந்த ஒரு பெண்ணிடம் வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், போலீஸார் இதில் தொடர்புடைய முக்கிய நபர்களைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x