Published : 27 Nov 2022 05:58 AM
Last Updated : 27 Nov 2022 05:58 AM

வடபழனியில் போலி நிறுவனம் தொடங்கி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி

சென்னை: சென்னை வடபழனியில் போலி நிறுவனம் தொடங்கி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராமாபுரத்தை சேர்ந்த ஜோஸ்பின் ராயன் என்பவர் அளித்த புகார் மனுவில், ‘அரசின் அனுமதியின்றி போலியான பெயரில் அலுவலகம் நடத்தி படித்த இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக, பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றிய திருவேற்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (38) என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், அரசின் அனுமதியின்றி போலியாக சென்னை வடபழனியில் கிரீன்வேஸ் எண்டர்பிரைசஸ் என்ற அலுவலகம் நடத்தி, படித்த இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.10 லட்சம் வரைரமேஷ் பணம் பெற்றது தெரியவந்தது.

45 பாஸ்போர்ட்கள் பறிமுதல்

மேலும், சிங்கப்பூர், மலேசியா, துபாய், கனடா, ரஷ்யா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் பிட்டர், வெல்டர், கார்பென்டர், மெக்கானிக் வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்து பணத்தை பெற்று அவர்களை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 45 பாஸ்போர்ட், 100 மருத்துவ சான்றிதழ், கார், இருசக்கர வாகனங்களை பறிமுதல்செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x