Published : 06 Oct 2022 07:50 AM
Last Updated : 06 Oct 2022 07:50 AM

வேலையில் இருந்து நீக்கிய உரிமையாளரை பழிவாங்க சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் அது புரளி என தெரியவந்தது.

இதுகுறித்து பூக்கடை போலீஸார் விசாரணையை தொடங்கினர். வெடிகுண்டு புரளி கிளப்பியநபர் பேசிய செல்போன் எண்ணைஆய்வு செய்தபோது, அது மெட்ரோரயில் துப்புரவு பெண் பணியாளர் ஒருவருக்கு சொந்தமானது எனதெரியவந்தது. அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, தனது செல்போன் தொலைந்து சில மணிநேரங்கள்தான் ஆகிறது எனவும்,இது தொடர்பாக புகார் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் செல்போன் சிக்னல் உதவியுடன், சென்னை ஆர்.கே.நகரில் வசிக்கும் சிவகங்கையை சேர்ந்த ரவிச்சந்திரன் (34) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர்தான் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

மிரட்டலுக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ரவிச்சந்திரன், தாம்பரத்தில் அமீர் நடத்தி வரும் தங்கும் விடுதியில் பணியாற்றியுள்ளார். பெண் விவகாரம் தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரவிச்சந்திரனை அமீர் அண்மையில் வேலையில் இருந்து நீக்கியுள்ளார். அவரை பழிவாங்கும் நோக்கில் கீழே கிடந்த போனை எடுத்து அமீர் பெயரை குறிப்பிட்டு ரவிச்சந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். வேறு ஒருவருடைய போன் மூலம் மிரட்டியதால் மாட்டிக்கொள்ள மாட்டோம் என நினைத்துள்ளார். இறுதியில் துப்பு துலக்கி ரவிச்சந்திரனை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x