Published : 29 Jul 2022 01:24 PM
Last Updated : 29 Jul 2022 01:24 PM

கஞ்சா விற்பனை: சென்னையில் 7 நாள் சிறப்பு சோதனையில் 20 பேர் கைது

சென்னை: சென்னையில் 7 நாட்கள் நடைபெற்ற சிறப்புச் சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதன்படி கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி கடந்த 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 31.85 கிலோ கஞ்சா, 8 கிராம் மெத்தம் பெட்டமைன், 1,200 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 6 செல்போன்கள், 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x