Published : 25 May 2022 06:20 AM
Last Updated : 25 May 2022 06:20 AM

சோளிங்கர் அருகே குடும்ப தகராறில் மதுபோதையில் தாக்கிய மகனால் தந்தை உயிரிழப்பு

சோளிங்கர்: சோளிங்கர் அருகே குடும்ப தகராறில் மதுபோதையில் இருந்த மகன் சரமாரியாக தாக்கியதில் தந்தை உயிரிழந்தார்.

சோளிங்கர் அடுத்த ஜோதி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (40). இவரது மனைவி சரஸ்வதி. மகன் சுரேஷ் (16), மகள் சுமித்ரா (15). சரஸ்வதியின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் ராஜாநகரம் மோட்டூரில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடந்துள்ளது. இதில், பங்கேற்க சுரேஷ் காப்பு கட்டியுள்ளார். பக்தர்களுடன் சேர்ந்து குளத்தில் இறங்கியபோது சுரேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதனால், சரஸ்வதியும் மகள் சுமித்ராவும் ஊருக்கு வராமல் இருந்தனர். மகன் இறந்த துக்கம் தாளாத கஜேந்திரன் மனைவி, மகளை சமாதானம் செய்து நேற்று முன்தினம் ஊருக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, கஜேந் திரனின் பெற்றோர் கன்னியப்பன், இந்திராணி ஆகியோர் சரஸ்வதியிடம் பேரன் இறந்தது தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், வேதனை அடைந்த சரஸ்வதி மகளுடன் தனது தாய் வீட்டுக்கு மீண்டும் சென்றுவிட்டார்.

மகன் இறந்து துக்கத்துடன் மனைவி, மகளுடன் மீண்டும் ஊருக்கு சென்றுவிட்டதால் வேதனை அடைந்த கஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். அதை தடுக்க வந்த தாய்க்கும் அடி, உதை விழுந்தது. தகராறில் மூவரும் கீழே உருண்டு புரண்டதில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் வசிப்பவர்கள் மூன்று பேரையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில், கன்னியப்பனை மட்டும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சைக்கு செல்லும் வழியில் கன்னியப்பன் இறந்தார். இது தொடர்பாக சோளிங்கர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கஜேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரது சிகிச்சை முடிந்ததும் கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x